த.வெ.க. பிரசாரக் கூட்டத்தில் சோகம்: விஜய் பேசிக்கொண்டிருந்தபோது வாலிபர் உயிரிழப்பு!
Tragedy at TVK Rally 37-Year-Old Supporter Dies of Cardiac Arrest in Salem
சேலம் சீலநாயக்கன்பட்டியில் இன்று (பிப். 13) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஒரு துயரச் சம்பவம் நேர்ந்துள்ளது. கட்சித் தலைவர் விஜய் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த நேரத்தில், கூட்டத்தில் பங்கேற்ற சிராஜ் (37) என்ற இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
சேலம் சிவசக்தி நகரைச் சேர்ந்த சிராஜ், வடமாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். கடந்த பல ஆண்டுகளாகத் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் சேலத்தில் வசித்து வந்த இவர், வெள்ளி கொலுசு தயாரிப்பு மற்றும் கட்டட வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு ஏற்கனவே ஒரு வருடத்திற்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
:விஜய்யின் பேச்சைக் கேட்கும் ஆர்வத்தில், திடலின் முன் வரிசையில் நீண்ட நேரமாகச் சிராஜ் நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அன்னதானப்பட்டி காவல் துறையினர் தற்போது இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசியல் எழுச்சி மிக்க ஒரு கூட்டத்தில், தொண்டர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Tragedy at TVK Rally 37-Year-Old Supporter Dies of Cardiac Arrest in Salem