திரிணமூல் காங்கிரஸில் அதிரடி பிளவு: தலைவர் பதவியிலிருந்து மமதா பானர்ஜி நீக்கம்!
TMC Political CrisisbMamata Banerjee Ousted from Party President Post by Rebel Faction
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் (TMC) கட்சி சந்தித்த எதிர்பாராத தோல்வியைத் தொடர்ந்து, அங்கு அக்கட்சிக்குள் நீண்டநாட்களாக புகைந்து கொண்டிருந்த உள்கட்சிப் பூசல் தற்போது மிகப்பெரிய பிளவாக வெடித்துள்ளது. கட்சியின் நிறுவனரும், மேற்கு வங்கத்தின் முகமுமான மமதா பானர்ஜியை, கட்சியின் தலைவர் பதவியிலிருந்து அதிருப்தி குழுவினர் அதிரடியாக நீக்கியுள்ளனர்.
கட்சிப் பிளவும் புதிய தலைமையும்:
மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவரும், திரிணமூல் காங்கிரஸின் அதிருப்தி எம்.எல்.ஏ-வுமான ரிதபிரத பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் திங்கள்கிழமை மாலை அவசர மற்றும் சிறப்புக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மமதா பானர்ஜிக்கு எதிராகச் செயல்படும் 58 அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மற்றும் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி-க்கள்) தனி அணியாகத் திரண்டு பங்கேற்றனர். இக்கூட்டத்தின் முடிவில், மமதா பானர்ஜியைத் தலைவர் பதவியிலிருந்து நீக்க ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கட்சியின் புதிய தலைவராக மூத்த எம்.எல்.ஏ. அரூப் ராய் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இனி மமதா பானர்ஜி கட்சியின் 'ஆலோசகராக' மட்டுமே செயல்படுவார் என்று ரிதபிரத பானர்ஜி செய்தியாளர்களிடம் பிரகடனம் செய்தார்.
அரசியலமைப்புச் சட்ட விளக்கம்:
இந்த அதிரடி நீக்கத்திற்குக் கட்சியின் உள்கட்டமைப்பு விதிகளையே அதிருப்தியாளர்கள் ஆயுதமாக ஏந்தியுள்ளனர். இதுகுறித்து ரிதபிரத பானர்ஜி விளக்குகையில்:
"திரிணமூல் காங்கிரஸ் தற்போது கடுமையான அரசியலமைப்புச் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. கட்சியின் விதிமுறை 20-ன்படி, ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசிய செயற்குழு மாற்றியமைக்கப்பட வேண்டும். கடைசியாக 2022 பிப்ரவரி 12 அன்று அறிவிக்கப்பட்ட செயற்குழுவின் பதவிக்காலம், நடப்பு 2026 பிப்ரவரி 11-டன் முடிவடைந்துவிட்டது. எனவே இந்த மாற்றம் சட்டப்படியானது."
மமதா தரப்பு மறுப்பும் நிதியதிர்ச்சியும்:
மறுபுறம், மமதா பானர்ஜியின் தீவிர ஆதரவாளரும் கட்சியின் மூத்த தலைவருமான குணால் கோஷ் இந்தச் செயலை முற்றிலும் நிராகரித்துள்ளார். இத்தகைய கூட்டங்களைக் கூட்டவோ அல்லது கட்சியின் கட்டமைப்பை மாற்றியமைக்கவோ அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு எந்தவொரு சட்டபூர்வ அதிகாரமும் இல்லை என்று அவர் சாடியுள்ளார்.
இருப்பினும், இந்த அதிகாரப் போட்டிக்கு நடுவே அதிருப்தியாளர்கள் கொடுத்த புகாரின் பேரில், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான சுமார் ரூ. 440 கோடி இருப்பு வைக்கப்பட்டிருந்த 3 முக்கிய வங்கிக் கணக்குகளை மேற்கு வங்கக் காவல்துறை அதிரடியாக முடக்கியுள்ளது. இது மமதா பானர்ஜி தரப்பிற்குப் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
TMC Political CrisisbMamata Banerjee Ousted from Party President Post by Rebel Faction