100 நாள் வேலை திட்டம்..உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த ஓபிஎஸ்..அப்போ கூட்டணி விஜய் பக்கம்தானா?
The 100 day work plan should be withdrawn immediately OPS which was agitated against the central government, is the alliance on Vijay side
100 நாள் வேலைத் திட்டத்திற்கு மாற்றாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதிச் சட்ட முன்வடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே நிதிப் பகிர்வின் மூலம் குறைந்த ஒதுக்கீட்டை மட்டுமே பெற்றுக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டிற்கு இந்த சட்ட முன்வடிவு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2005ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் ஆண்டுக்கு குறைந்தது 100 நாள் வேலை வழங்கப்படும் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் நாடு முழுவதும் 25 கோடிக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ள நிலையில், 14 கோடிக்கு அதிகமானோர் செயலில் உள்ள தொழிலாளர்களாக உள்ளனர். இந்த சூழலில், மாநிலங்களுக்கு வழங்கப்படும் மத்திய அரசின் நிதிப் பங்கினை 90 சதவிகிதத்தில் இருந்து 60 சதவிகிதமாகக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் மாநிலங்களின் நிதிச் சுமை 10 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதமாக உயர்கிறது.
மேலும், புதிய சட்ட முன்வடிவில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீடு மத்திய அரசு வகுக்கும் வரம்புகளுக்கு உட்பட்டு நிர்ணயிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் தொகை மற்றும் வறுமை அடிப்படையில் நிதி பகிர்வு செய்யப்பட்டால், வளர்ச்சி அடைந்த மாநிலங்களுக்கான ஒதுக்கீடு குறையும் அபாயம் இருப்பதாக ஓபிஎஸ் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் வேலை பெறுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக குறையக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அதேபோல், வேளாண் பருவத்தை கருத்தில் கொண்டு ஆண்டுக்கு 60 நாட்கள் எந்த வேலைகளும் மேற்கொள்ளக்கூடாது என மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் என்ற விதி, விவசாயத் தொழிலாளர்களை குறைந்த ஊதியத்தில் வேலை செய்யும் நிலைக்கு தள்ளும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இந்த சட்ட முன்வடிவு வேலைவாய்ப்பை குறைப்பதோடு, மாநில அரசுகளின் மீது கூடுதல் நிதிச் சுமையையும் ஏற்படுத்தும் என அவர் கூறியுள்ளார்.
எனவே மாநிலங்களின் நலன்களையும், விவசாயிகள் மற்றும் ஏழை கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் இந்த விக்ஷித் பாரத் சட்ட முன்வடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பி விரிவான ஆய்வு செய்ய வேண்டும் என்றும் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசுக்கு எதிராக ஓபிஎஸ் வெளியிட்ட இந்த அறிக்கை அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
The 100 day work plan should be withdrawn immediately OPS which was agitated against the central government, is the alliance on Vijay side