கரூர் துயரச் சம்பவத்திற்கு தவெகவே பொறுப்பு! விஜயை கடுமையாக சாடிய வைகோ!
Thawekave is responsible for the Karur tragedy Vaiko strongly criticizes Vijay
கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தவெக (தமிழக வெற்றிக் கழகம்) பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது, 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த துயரச் சம்பவம் தமிழக அரசியலில் பெரிய அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்துக்குப் பொறுப்பேற்க வேண்டியது தவெகவே என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,“கரூர் துயரச் சம்பவத்திற்கு தமிழக வெற்றிக் கழகம்தான் காரணம்.காலை 10.30 மணிக்கு வருவதாகச் சொல்லிவிட்டு, மாலை 7 மணிக்கே விஜய் கரூர் எல்லைக்குப் போனார். அவரைப் பின் தொடர்ந்து வந்த தொண்டர்களால் ஏற்கனவே இருந்த கூட்டம் இருமடங்கானது. கூட்ட நெரிசல் ஏற்படும் அபாயத்தை முன்னரே உணர்ந்து விஜய் கவனமாக நடந்திருக்க வேண்டும். ஆனால் தவெக தலைமை அதில் தவறிவிட்டது,”என்று வைகோ குற்றஞ்சாட்டினார்.
மேலும் அவர்,“கூட்டத்தை ஒழுங்குபடுத்துவது கட்சியின் கடமை. அதில் தவெக தோல்வியடைந்தது. இதற்கு திமுகவையோ, அரசையோ குறை சொல்வது நியாயமற்றது. விஜய் ஆரம்பத்திலேயே வாகனத்தில் இருந்து ரசிகர்களை கலைந்து செல்லச் சொல்லியிருந்தால், இந்த பேரழிவு தவிர்க்கப்பட்டிருக்கும்,”என்று சுட்டிக்காட்டினார்.
போலீசாரின் நடவடிக்கையைப் பற்றி அவர்,“கூட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதாக நான் எந்தக் காட்சியையும் பார்க்கவில்லை. அதுபோன்ற குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை,”என்றும் கூறினார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில், கரூர் நகர போலீசார்,தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி. மதியழகன்,மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ்,மற்றும்கட்சியின் சில முக்கிய நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்துள்ளனர்.
ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு வைகோ எதிர்ப்பு:தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட ‘அரசுக்கு எதிராக புரட்சி வேண்டும்’ என்ற பதிவை வைகோ கடுமையாக கண்டித்தார்.“பாரதியின் வார்த்தைகளை இப்படிச் சிதைத்து பயன்படுத்துவது அவரது மதிப்பைக் குறைக்கும் செயல். பொதுமக்களைத் தூண்டும் வகையிலான இந்த கருத்துகள் பொறுப்பற்றவை,”
என்று வைகோ விமர்சித்தார்.
முடிவில் வைகோ கூறியதாவது:“இந்த பேரழிவுக்கு தவெகவே முழுமையாகப் பொறுப்பு ஏற்க வேண்டும். பிறரை குற்றம்சாட்டுவது முறையல்ல,”என்று வலியுறுத்தினார்.
கரூர் துயரச் சம்பவம் குறித்து தொடர்ந்து அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துகளை வெளியிட்டு வரும் நிலையில், வைகோவின் இந்தக் கடுமையான விமர்சனம் தற்போது புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
English Summary
Thawekave is responsible for the Karur tragedy Vaiko strongly criticizes Vijay