நாங்கள் இருவரும் அக்கா தம்பி போல! சூர்யா சிவா, டெய்சி சரண் கூட்டாக பேட்டி!
Suriya Siva Daisy Saran jointly said they are brother and sister
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஜக சிறுபான்மையினர் பிரிவு தலைவர் டெய்சி சரணும், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவாவும் செல்போனில் மோதிக்கொண்ட ஆடியோ வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது. அந்த ஆடியோவில் பேசிய சூர்யா சிவா டெய்ஸி சரணை தகாத வார்த்தைகளால் பேசி இருந்தார்.
இந்த விவகாரம் குறித்து ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இருவரும் இன்று ஒழுங்கு நடவடிக்கை குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து இன்று இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அந்த சந்திப்பின் போது பேசிய டெய்சி சரண் "எங்களுக்குள் விரும்பத்தகாத சில செயல்கள் நடந்துள்ளது. இதனால் பாஜகவிற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி உள்ளது. சூர்யா சிவா எனது தம்பி போலவே பழகினார். இந்த விவகாரத்தை இருவரும் பரஸ்பரம் பேசி இத்துடன் முடித்துக் கொள்வது என முடிவு செய்துள்ளோம்.
எனவே ஊடகங்கள் இந்த விஷயத்தை பெரிது படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். இதை யாருடைய வற்புறுத்தலினாலும் நடைபெறவில்லை. நாங்கள் இருவரும் அக்கா தம்பியாகவே தொடர்ந்து பணி பயணிக்க முடிவு செய்துள்ளோம்" என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய திருச்சி சூர்யா சிவா "எங்கள் இருவருக்கும் இடையே தனிப்பட்ட உரையாடல் நடந்துள்ளது. ஒழுங்கு நடவடிக்கை குழுவை சந்தித்தோம். எங்கள் இருவரின் தரப்பில் இருந்தும் ஆடியோ வெளியாகவில்லை என விளக்கம் அளித்தோம்.
வேறு யார் மூலம் வெளியானது என்பது குறித்து விசாரணையில் தெரிய வரும். நான் பேசியது தவறு என்றால் பாஜக எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுவேன். இந்த பிரச்சனைக்கு முன்பு நாங்கள் இருவரும் குடும்ப உருவாகவே இருந்தோம்" என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
English Summary
Suriya Siva Daisy Saran jointly said they are brother and sister