டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்றால் கடும் நடவடிக்கை! 3வது முறை தவறு தொடர்ந்தால் டிஸ்மிஸ்!
Strict action will be taken if liquor is sold at inflated prices in TASMAC shops Dismissal if the offense is repeated a third time
டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக பணம் வசூலித்து மதுபானங்களை விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். மூன்றாவது முறையாக இந்த விதிமீறலில் ஈடுபடுவது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட பணியாளர் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்படுவார் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மதுபான விற்பனையை முழுமையாக டாஸ்மாக் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அரசு நிர்ணயித்த விலைக்கே மதுபானங்கள் விற்கப்பட வேண்டும் என்பது நடைமுறையில் இருந்தாலும், பல்வேறு பகுதிகளில் ஒரு பாட்டிலுக்கு ₹10 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
சமீபத்தில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு தமிழக அரசு சம்பள உயர்வு அறிவித்ததைத் தொடர்ந்து, கூடுதல் வசூல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மீண்டும் இதுபோன்ற புகார்கள் வந்ததை அடுத்து, டாஸ்மாக் நிர்வாகம் திருத்திய ஒழுங்கு நடவடிக்கை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, முதல் முறையாக கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றது கண்டறியப்பட்டால் ஒரு மாதம் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். இரண்டாவது முறையாக அதே குற்றம் உறுதி செய்யப்பட்டால் மூன்று மாதங்கள் பணியிடை நீக்கம் செய்யப்படும். மூன்றாவது முறையாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டறியப்பட்டால் முதலில் பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டு விளக்க நோட்டீஸ் வழங்கப்படும். அதன் பின்னர் நடத்தப்படும் விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்படுவார்.
மேலும், ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகும் பணியாளர்களின் விவரங்கள் அனைத்தும் அவர்களின் அதிகாரப்பூர்வ சர்வீஸ் ரெஜிஸ்டரில் (Service Register) பதிவு செய்யப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அரசு நிர்ணயித்த விலையை மீறி மதுபானங்களை விற்பனை செய்வோர் மீது இனி எந்தவித சலுகையும் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
English Summary
Strict action will be taken if liquor is sold at inflated prices in TASMAC shops Dismissal if the offense is repeated a third time