41 பேர் உயிரிழந்த கூட்ட நெரிசல் சம்பவம்...! - விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு...!
stampede incident which 41 people died CBI decided interrogate Vijay
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தின் போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசல், பெரும் சோக சம்பவமாக மாறியது. இந்த நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன், மேலும் 110 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சரியா அடங்கிய அமர்வு, கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி முக்கியமான இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

அதன்படி, இந்த வழக்கின் விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.-க்கு மாற்ற உத்தரவிடப்பட்டதுடன், விசாரணை முழுவதையும் சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, த.வெ.க. மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணைச் செயலாளர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சி.பி.ஐ. முன்பு ஆஜராகி தங்களது தரப்பு விளக்கங்களை அளித்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில், இந்த வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கையாக, த.வெ.க. தலைவர் விஜய்யிடம் நேரடியாக விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை சி.பி.ஐ. அதிகாரிகள் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், விஜய்யை கரூருக்கு அழைத்து விசாரிப்பதில் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்பதால், அவரிடம் சென்னையிலேயே விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
stampede incident which 41 people died CBI decided interrogate Vijay