மலர் தூவிய வானம்…அணிவகுத்த வீரர்கள்…மெரினாவில் சிறப்பான குடியரசு தின விழா! - கொடி ஏற்றிய ஆளுநர்
sky showered flowers marching soldiers spectacular Republic Day celebration Marina Governor hoisted flag
நாட்டின் 77-வது குடியரசு தின விழா இன்று (திங்கட்கிழமை) நாடெங்கும் தேசிய பெருமிதத்துடன் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே பிரமாண்டமான முறையில் குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விழாவை சிறப்பிக்க உழைப்பாளர் சிலை பகுதி முழுவதும் மாபெரும் பந்தல்கள் அமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன. சபாநாயகர், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள், வெளிநாட்டு தூதர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் விழா பந்தலில் சிறப்பு விருந்தினர்களாக அமர்ந்திருந்தனர்.

மேலும், காலை 7.55 மணிக்கு விழா வளாகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். போலீசாரின் மோட்டார் சைக்கிள்கள் முன்பும் பின்னும் புடைசூழ, பாதுகாப்பு வட்டாரத்துடன் அவர் வரவேற்கப்பட்டார். கூடியிருந்த பொதுமக்களுக்கும், பந்தலில் அமர்ந்திருந்த பார்வையாளர்களுக்கும் அவர் கையசைத்து அன்புடன் வாழ்த்து தெரிவித்தார்.
அணி வணக்கம் ஏற்கும் மேடைக்கு வந்த முதல்வரை தலைமைச் செயலாளர் முருகானந்தம் மரியாதையுடன் வரவேற்றார்.அதனைத் தொடர்ந்து காலை 7.58 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது மனைவி லட்சுமி ரவியுடன் விழா வளாகத்தை அடைந்தார். விமானப்படை வீரர்கள் மோட்டார் சைக்கிள்களில் புடைசூழ அவரை அழைத்து வந்தனர்.
அவரும் பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு கையசைத்து வாழ்த்து தெரிவித்தார். மேடைக்கு அருகே வந்த ஆளுநரை முதல்வர் மு.க.ஸ்டாலின் பசுமை கூடை வழங்கி மரியாதையுடன் வரவேற்றார்.அதன் பின்னர் தென்னிந்திய ராணுவ மேஜர் ஜெனரல், கடற்படை அதிகாரி, தாம்பரம் வான்படை நிலைய தலைமை அதிகாரி, கடலோர காவல்படை கிழக்கு கமாண்டர், தமிழக டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர், கூடுதல் டிஜிபி (சட்டம் – ஒழுங்கு) உள்ளிட்ட உயர் அதிகாரிகளை முதல்வர் ஆளுநருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
காலை 8 மணிக்கு விழா வளாகத்தில் அமைந்திருந்த கொடிக் கம்பத்தில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றிவைத்தார். அந்தக் கணத்தில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் வானில் பறந்து மலர் தூவி வணங்கியது. அதே நேரத்தில் முழங்கிய தேசிய கீதம், விழா வளாகத்தை நாட்டுப்பற்றின் நாதத்தால் நிரப்பியது. இது ஆளுநர் ஐந்தாவது முறையாக தேசியக் கொடியை ஏற்றிய தருணமாகும்.
அதன்பின்னர் ராணுவம், கடற்படை, வான்படை, ராணுவ குழல்-முரசிசை பிரிவு உள்ளிட்ட படைப்பிரிவுகள் அணிவகுத்து வந்து ஆளுநருக்கு அணி வணக்கம் செலுத்தினர். கடற்படை ஊர்தியில் போர்க்கப்பல் வடிவம், வான்படை ஊர்தியில் விமான வடிவம், கடலோர காவல்படை ஊர்தியில் படகு வடிவம் என வீரத்தின் சின்னங்கள் அணிவகுத்து வந்தன.
தொடர்ந்து சிஐஎஸ்எப், சிஆர்பிஎப், ஆர்பிஎப், தமிழ்நாடு சிறப்பு காவல், பேரிடர் நிவாரணப்படை, கடலோர பாதுகாப்புக் குழு, ஊர்க்காவல் படை (ஆண்கள் – பெண்கள்) உள்ளிட்ட 30 படைப்பிரிவினர் ஒழுங்குடன் march past செய்தனர்.அதனைத் தொடர்ந்து மேடைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தித் திறன் விருது, காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், சிறந்த காவல் நிலையக் கோப்பைகள் ஆகியவற்றை உரியவர்களுக்கு வழங்கினார்.
விருது பெற்றோர் குழுவாக முதல்வருடன் நினைவுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.பின்னர் அலங்கார ஊர்திகளின் வண்ணமயமான அணிவகுப்பு நடைபெற்றது.
செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் மங்கள இசை ஊர்தி உள்பட பல்வேறு அரசுத் துறைகளின் ஊர்திகள், அரசின் நலத்திட்டங்களை விளக்கும் கலைநயமான வடிவமைப்புகளுடன் வளாகத்தை வலம் வந்தன. அதற்கு முன்பாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளின் பாரம்பரிய நடனங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தன.
English Summary
sky showered flowers marching soldiers spectacular Republic Day celebration Marina Governor hoisted flag