ஜாமினா? காவல் நீட்டிப்பா? செந்தில் பாலாஜியின் வழக்கு இன்று விசாரணை!
SenthilBalaji case hearing today in Chennai principal court
சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜரான செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் உடல் நிலையை கருத்தில் கொண்டு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும், 70 நாட்களுக்கு மேலாக நீதிமன்ற காவலில் சிறையில் இருப்பதாகவும், அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் வாதிட்டார்

அப்போது ஆஜரான அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து தங்கள் தரப்பு கருத்தை தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தார். அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி இன்று (செப்.15) ஒத்தி வைத்தார்.
அதன்படி செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. அதேபோன்று செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை சிறப்பு நீதிமன்ற நீதிபதி இன்று (செப்.15) வரை நீடித்து உத்தரவிட்டிருந்த நிலையில் அவருடைய நீதிமன்ற காவலும் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்படுமா? அல்லது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்படுமா? என்பது இன்றைய விசாரணையில் தெரியவரும்.
English Summary
SenthilBalaji case hearing today in Chennai principal court