தவெகவிற்கு எதிராக திமுக திட்டம்; அம்பாசமுத்திரம் தொகுதியில் பொதுவேட்பாளராக களமிறங்கும் சீமான்..?
Seeman to contest as common candidate in Ambasamudram constituency
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்ட நிலையில், அனைத்து இடங்களிலும் தோல்வியைச் சந்தித்தது. இதனால் அதன் வாக்கு வங்கியும் 08 சதவீதத்திலிருந்து 04 சதவீதமாகக் குறைந்தது. காரைக்குடியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் டெபாசிட் இழந்து 04- ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இந்நிலையில், தவெக கட்சியின் தலைவர் விஜய் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தமிழத்தில் தவெக வெற்றிப்பெற்று ஆட்சியை பிடித்த நிலையில் விஜய் முதல்வராகியுள்ளார்.
இதனையடுத்து அவர், திருச்சி கிழக்கு தொகுதி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் திருச்சி கிழக்கு தொகுதியை தொடர்ந்து, பெருந்துறை, தாராபுரம், மதுராந்தகம், அம்பாசமுத்திரம், விராலிமலை ஆகிய 06 தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த இடைத்தேர்தலில் தவெக கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் திமுக தீவிரமாகி முயற்சித்து வருகிறது. கேப்போன்று ஆளும் தவெகவிற்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து பொது வேட்பாளர்களை நிறுத்த ஆலோசித்து வருகிறது.
இதன் முதல்கட்டமாக நெல்லை மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் தொகுதியில் தீவிர பணிகளை தொடங்கியுள்ளது. கடந்த தேர்தலில் அம்பாசமுத்திரத்தில் அதிமுக சார்பில் வென்ற இசக்கி சுப்பையா, இரண்டாம் இடம் பிடித்த காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் மூன்றாம் இடம்பிடித்த தவெக வேட்பாளர் என மூவருமே தற்போது தவெக அணியில் உள்ளனர்.
இத்தொகுதியில் நாடார் சமூகத்தினர் கணிசமாக வசிப்பதைக் கணக்கில் கொண்டு, அதே சமூகத்தைச் சேர்ந்த சீமானை பொது வேட்பாளராக நிறுத்த திமுக தற்போது காய் நகர்த்தி வருகிறது. சீமானை சம்மதிக்க வைக்கும் பொறுப்பு முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியிடமும் திரைமறைவு பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, அம்பாசமுத்திரத்தில் சீமானை வெற்றி பெறச்செய்து சட்டப்பேரவைக்குள் அனுப்பினால், அது முதல்வர் விஜய்க்கும், தவெகவுக்கும் சட்டப்பேரவையில் கடுமையான அரசியல் நெருக்கடியை கொடுக்க முடியும் மற்றும் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் குரல் மேலும் வலுப்பெறும் என திமுக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் பேசியபோது, எங்கள் தரப்பில் யாரிடமும் பேச்சுவார்த்தை எதுவும் இதுவரை நடத்தப்படவில்லை. அடுத்த சில நாட்களில் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் இதுபற்றி விவாதிக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
English Summary
Seeman to contest as common candidate in Ambasamudram constituency