சனாதன விவகாரம்: தைரியம் இருந்தா தேர்தலுக்கு முன்னாடி சொல்லியிருக்கலாமே! - போட்டுத் தாக்கிய அண்ணாமலை...!
Sanatana issue If you had courage you could have said it before election Annamalai attacked
தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த “மக்களைப் பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்” என்ற கருத்து அரசியல் வட்டாரங்களில் கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
அவரது பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வரும் நிலையில், அதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் விரிவான விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.அந்த பதிவில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் நான் பேசியபோது, ‘மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் அகற்றப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டேன்.

இதற்காக சிலர் என்னை விமர்சித்து வருகின்றனர். ஆனால் விமர்சனங்களுக்கு அஞ்சும் மனிதன் நான் அல்ல. எதிர்ப்புகளின் நடுவே வளர்ச்சி கண்ட இயக்கம்தான் திராவிட இயக்கம்.சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்வதன் பொருள், யாரும் கோயிலுக்கு செல்லக்கூடாது என்பதல்ல.
கோயில்களிலும், சமூக வாழ்விலும் அனைவருக்கும் சம உரிமை நிலவ வேண்டும் என்பதே அதன் உண்மை அர்த்தம். உயர்சாதி, தாழ்சாதி என்ற பெயரில் மனிதர்களை பிரிக்கும் மனப்போக்கே அகற்றப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன்.
பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் ஆகியோர் எடுத்துரைத்த சமூகநீதி கொள்கையைத்தான் நானும் தொடர்ந்து பேசி வருகிறேன். எவருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எங்களுக்கெதிர்ப்பு இல்லை. ஆனால் சமத்துவமின்மையையும், ஒடுக்குமுறையையும் உறுதியாக எதிர்ப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், “சனாதன தர்மமும் ஹிந்து மதமும் வேறுபட்டவை அல்ல” என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசிய காணொளியை வெளியிட்டு, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அண்ணாமலை:
அவர் தனது எக்ஸ் பதிவில், “இந்த பழைய விளக்கத்தை இன்னும் எத்தனை முறை சொல்லப் போகிறீர்கள்? சனாதன தர்மமும், ஹிந்து மதமும் ஒன்றே என்று உங்களது சித்தாந்த வழிகாட்டியே கூறுகிறார்.
அவர்தானே உங்களது அரசியல் அணியின் கருத்தியல் குருநாதர்?தேர்தலுக்கு முன்பாக மக்களிடம் வாக்கு கேட்கச் சென்றபோது, இதே கருத்துகளை திறந்தவெளியில் பேசியிருக்கலாமே. கூடவே உங்கள் சித்தாந்த தலைவரையும் அழைத்துச் சென்றிருக்கலாமே.
தைரியமாக பேசுபவர் என்று தங்களை காட்டிக்கொள்கிறீர்களே, அப்போது ஏன் மௌனமாக இருந்தீர்கள்? வாகனத்தில் இடமில்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
Sanatana issue If you had courage you could have said it before election Annamalai attacked