நாளை புதுச்சேரி முதல்வராக மீண்டும் பதவியேற்கும் ரங்கசாமி; என்ஆர் காங்., பாஜகவைச் சேர்ந்த 05 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்..!
Rangasamy to be sworn in again as Puducherry Chief Minister tomorrow
நடந்து முடிந்த புதுச்சேரிசட்டமன்ற தேர்தலில் என்ஆர் காங்கிரஸ், 12 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது. பாஜக மற்றும் அதிமுக, லஜக ஆதரவுடன் கூட்டணியில் ஆட்சியமைக்கிறது. அதன்படி, தேஜ கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஏற்கனவே தலைவராக ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதற்கான ஆதரவு கடிதத்துடன், ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்த ரங்கசாமி, ஆட்சியமைக்க அனுமதி கோரிய நிலையில், ஆட்சியமைக்க வருமாறு ரங்கசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து நேற்று ஆளுநரை சந்தித்த ரங்கசாமி, புதிய அமைச்சரவை பட்டியலை அவரிடம் வழங்கினார்.
இந்நிலையில் புதுச்சேரியில் 05வது முறையாக, முதல்வராக ரங்கசாமி நாளை (13-ஆம் தேதி) காலை 09.45 மணிக்கு பதவியேற்கவுள்ளார். புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் ரங்கசாமிக்கும், 05 அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணத்தையும் ஆளுநர் கைலாஷ்நாதன் செய்து வைக்கவுள்ளார்.

தொடர்ந்து அமைச்சர்களாக நமச்சிவாயம் (பாஜக), மல்லாடி கிருஷ்ணாராவ், ராஜவேலு (என்ஆர் காங்.), காரைக்கால் ஜிஎன்எஸ் ராஜசேகரன் (பாஜக), டாக்டர் நாராயணசாமி (என்ஆர் காங்.) ஆகியோர் அடுத்தடுத்து பதவியேற்க உள்ளனர். புதிய அமைச்சரவை பட்டியல் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அனுமதி கிடைக்காத பட்சத்தில், இதில் சில மாற்றங்கள் செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக புதுச்சேரி அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பதவியேற்பு விழாவில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பாஜ மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இவ்விழாவுக்கான பந்தல் அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் ஆளுநர் மாளிகையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புதிய அமைச்சரவை நாளை பதவியேற்ற பின், சபாநாயகராக என்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து தேர்வு செய்யப்பட இருப்பதாகவும், துணை சபாநாயகர் பதவி பாஜகவுக்கு வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2021-இல் 06 தொகுதிகளை கைப்பற்றிய பாஜகவுக்கு 02 அமைச்சர், சபாநாயகர் பதவியை ரங்கசாமி வழங்கினார். 05-வது முறையாக முதல்வராக பதவியேற்கும் ரங்கசாமி ஏற்கனவே 2001, 2006, 2011, 2021-இல் முதல்வராக பதவியேற்றுள்ளார்.
இந்த 2026 புதுச்சேரி அமைச்சரவையில் இடம்தர வேண்டுமென அதிமுக போர்க்கொடி தூக்கியிருந்த நிலையில் அக்கட்சியை மீண்டும் ரங்கசாமி கைவிரித்துள்ளதால் அதிமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
English Summary
Rangasamy to be sworn in again as Puducherry Chief Minister tomorrow