ராகுல் காந்தி எடுத்த முக்கிய முடிவு! திமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் கட்சி செல்லாது..பின்னணியில் இப்படியொரு காரணமா?
Rahul Gandhi important decision Congress party will not leave DMK alliance Is there a reason behind this
தமிழக அரசியல் களத்தில் திமுக–காங்கிரஸ் கூட்டணி குறித்து பல்வேறு யூகங்கள் பரவி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி இந்த கூட்டணியில் இருந்து விலக வாய்ப்பில்லை என்பதற்கு அரசியல் விமர்சகர்கள் பல காரணங்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக, 2029 லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் நீண்டகால இலக்கே, திமுக கூட்டணியை தொடர வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
விக்கிரவாண்டி மாநாட்டில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), “எங்களுடன் கூட்டணி சேரும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வழங்கப்படும்” என அறிவித்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இதன் மூலம் திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் விலகி தவெக பக்கம் வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்தக் கட்சியும் விஜயுடன் கூட்டணி அமைக்க முன்வரவில்லை.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்குள் மட்டும் சலசலப்பு அதிகரித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்திய தேசிய காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் விஜய்க்கு ஆதரவாக பேசி வருவதும், தவெக நிகழ்ச்சிகளில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவு தெரிவிப்பதும் கவனிக்கத்தக்கதாக உள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் நிர்வாகிகள் பிரவீன் சக்ரவர்த்தி, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, திருச்சி வேலுச்சாமி உள்ளிட்டோர் விஜயை நேர்மறையாக பேசிவருகின்றனர்.
ஆனால், தவெகவின் அடிப்படை அரசியல் கட்டமைப்பு, அமைப்பு வலிமை மற்றும் தேர்தல் தயாரிப்பு குறித்து காங்கிரஸ் கட்சிக்குள் தீவிர சந்தேகம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் பொறுப்பில் உள்ளவர்கள் பலரும், தவெக கூட்டணி காங்கிரஸுக்கு அரசியல் ரீதியாக ஒத்துவராது என்பதை கட்சி தலைமையிடம் வலியுறுத்தி வருகிறார்களாம். இருப்பினும், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகும் என்ற தகவலை தவெக மற்றும் அதிமுக வட்டாரங்கள் தொடர்ந்து பரப்பி வருகின்றன.
இந்த விவகாரம் குறித்து அரசியல் நிலவரங்களை நெருக்கமாக அறிந்தவர்கள் கூறுவதாவது: கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட முழுமையாக பெற முடியாத சூழலில் இருந்தது. தற்போதைய நாடாளுமன்றத்தில் தான் காங்கிரஸ் செயல்பாடுகள் ஓரளவு வலுவடைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. அதேபோல், **ராகுல் காந்தி**யை பிரதமர் வேட்பாளராக அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, சரத் பவார், உத்தவ் தாக்கரே, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இதுவரை வெளிப்படையாக ஏற்கவில்லை.
இந்தச் சூழலில், தமிழ்நாட்டின் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மட்டுமே, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக தொடர்ந்து அங்கீகரித்து வருகிறார். இது காங்கிரஸுக்கு அரசியல் ரீதியாக மிக முக்கியமான ஆதரவாக பார்க்கப்படுகிறது. மேலும், லோக்சபா தேர்தல் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், **INDIA கூட்டணி**யில் இருந்து எந்தக் கட்சியும் விலகவில்லை. இந்த கூட்டணி இன்னும் மூன்று ஆண்டுகள் ஒருமித்தமாக நீடித்தால், 2029-ல் மத்தியில் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது என்ற நம்பிக்கையே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது.
இதனால், தமிழ்நாட்டின் அனைத்து லோக்சபா தொகுதிகளிலும் வெற்றியை உறுதி செய்யும் திமுகவுடனான கூட்டணியை, காங்கிரஸ் கட்சி எளிதாக முறித்துக் கொள்ளாது என்பதே அரசியல் விமர்சகர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்பதைவிட, மத்தியில் ஆட்சியை கைப்பற்றுவதே காங்கிரஸின் முதன்மை இலக்கு என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வெறும் 10 முதல் 15 சட்டசபைத் தொகுதிகளுக்காக இந்த நீண்டகால தேசிய இலக்கை காங்கிரஸ் இழக்க தயாராக இருக்காது என்பதும், தவெகவுடன் கூட்டணி அமைத்து தோல்வி அடைந்தால் அதற்கான மாற்றுத் திட்டம் என்ன என்ற கேள்விக்கு காங்கிரஸ் தலைமையிடம் தெளிவான பதில் இல்லாததும், திமுக கூட்டணியை தொடரும் முடிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதனாலேயே, “ஆட்சியில் பங்கு” என்ற தவெக முன்மொழிவை காங்கிரஸ் தலைமை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Rahul Gandhi important decision Congress party will not leave DMK alliance Is there a reason behind this