பிரம்மாண்ட வரவேற்புகள் தயார் நிலையில் நாளை தூத்துக்குடிக்கு வருகை தரும் பிரதமர் மோடி!
Prime Minister Modi visit Thoothukudi tomorrow with grand reception store
தூத்துக்குடியில் உலக தரத்தில் நவீன முறையில் ரூ. 381 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள விமான நிலையத்தை நாளை அதாவது சனிக்கிழமை இரவு பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.அதுபோல தூத்துக்குடி துறைமுகம் முதல் ரூ.200 கோடியில் அமைக்கப்பட்டு முடிவுற்ற 6 வழிச்சாலை திட்டப் பணி என மொத்தம் ரூ. 4,500 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளையும் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

இதன் காரணமாக, நாளை இரவு 8 மணியளவில் மாலத்தீவிலிருந்து பிரதமர் மோடி தனி விமானத்தில் தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். மேலும், தூத்துக்குடிக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சித்ராங்கதன் ஏற்பாட்டில் பா.ஜ.க. சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து செட்டிநாடு கட்டிட கலையை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள விமான நிலைய பயணிகள் முனையம் போன்ற இடங்களை கண்டுமகிழ்கிறார். அதன் பிறகு, விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இதில் பிரதமர் மோடியை வரவேற்க மாவட்டம் முழுவதுமுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலிருந்து, 2000 வாகனங்களில் 50000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் விமான நிலையத்திற்கு வருகை தரவுள்ளனர்.இதுபோல கன்னியாகுமரி,விருதுநகர், மதுரைநெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்களும் பிரதமரை காண ஆயிரக்கணக்கில் வருகை தர உள்ளனர்.
இதனால் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள், பொதுமக்கள் விழாவில் கலந்து கொள்வார்கள் என்று நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இந்த விழாவிற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மேலும், விழா மேடை முன்பு 10000 பேர் அமரும் வகையில் மட்டுமே இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது, விழா மேடையில் முக்கிய நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.மேலும், பிரதமர் மோடி வருகையையொட்டி தூத்துக்குடி விமான நிலையத்தில் 5 அடுக்கு காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இதில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தூத்துக்குடி காவலர்கள் உள்பட 1000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
English Summary
Prime Minister Modi visit Thoothukudi tomorrow with grand reception store