அரசியல் களம் சூடாகும் தருணம்: ஓபிஎஸ் ஆலோசனை கூட்டம் – தமிழக அரசியலில் புதிய திருப்பமா?
political arena heating up OPSs consultative meeting new turning point Tamil Nadu politics
தமிழக அரசியலில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் மோடில் குதித்துள்ளன.
பிரசாரம், பொதுக்கூட்டங்கள், நலத்திட்ட அறிவிப்புகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைகள், அடிப்படை அமைப்புகளை பலப்படுத்துதல் என அரசியல் நடவடிக்கைகள் வேகமெடுத்து வருகின்றன.இந்த அரசியல் பரபரப்புக்கு நடுவே, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கியுள்ள ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு’ மீண்டும் கவனத்தின் மையமாகியுள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த இந்த அமைப்பு, கடந்த ஜூலை மாதம் திடீரென அந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. மேலும், தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து முக்கிய முடிவு அறிவிக்கப்படும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பல கேள்விகளை எழுப்பியது. தொடர்ந்து கோவையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்ததும், இந்த சந்திப்புகள் அரசியல் முக்கியத்துவம் கொண்டவை என பேசப்பட்டது.
இதன் பின்னணியில், நடைபெற இருந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஆலோசனை கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டதும் அரசியல் சூழலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஆலோசனை கூட்டம் வரும் 23ம் தேதி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஒய்.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், அமைப்பின் அரசியல் எதிர்காலம் மற்றும் இறுதி முடிவு குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டம் தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.
English Summary
political arena heating up OPSs consultative meeting new turning point Tamil Nadu politics