எவரும் நமக்கு இணையல்ல: தடைகளை தகர்ப்போம்... மக்களின் மனங்களை வெல்வோம்... வெற்றியை நமதாக்குவோம் - மருத்துவர் இராமதாஸ் தொண்டர்களுக்கு கடிதம்.! - Seithipunal
Seithipunal


எவரும் நமக்கு இணையல்ல: தடைகளை தகர்ப்போம்... மக்களின் மனங்களை வெல்வோம்... வெற்றியை நமதாக்குவோம் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
அவரின் அந்த கடிதத்தில், "என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைமுறைகள் நிறைவடைந்து, சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பரப்புரை என்ற அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறோம். களத்தில் இருப்பை உறுதி செய்துள்ள நாம், அடுத்து வெற்றிகளை அறுவடை செய்வதற்கான சாகுபடி காலம் தான் இந்த பரப்புரை காலம் ஆகும். ‘‘உன்னால் முடியும்... நீ சாதிப்பாய்’’ என்ற உண்மையை  உனக்கு உணர்த்துவதற்காகத் தான் எனது உயிரினும் மேலான பாட்டாளிகளுக்கு இந்த மடலை வரைகிறேன்.

நாடாளுமன்ற ஜனநாயகம், சட்டமன்ற ஜனநாயகம் ஆகியவற்றை விட உள்ளாட்சி ஜனநாயகம் தான் மிகவும் வலிமையானது என்பதில் பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக உள்ளது. அதனால் தான் நாட்டு மக்களுக்கான எந்த ஒரு திட்டமிடலும் உள்ளாட்சியிலிருந்து தொடங்க வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 

இந்திய ஜனநாயகம் வலிமைப்படுத்தப்பட வேண்டும் என்றால், உள்ளாட்சியில்  ஜனநாயகம் தழைக்க வேண்டும். அதற்காகத் தான் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. ஆனால், உள்ளாட்சிகளில் ஜனநாயத்தை தழைக்கச் செய்வதற்கான தேர்தல்கள் நடத்தப் படுவதற்கு முன்பாகவே, ஜனநாயகத்தை படுகொலை செய்வதற்கான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவது, வாக்குப்பெட்டிகளை மாற்றுவது, வெற்றி பெற்ற வேட்பாளரை தோல்வியடைந்ததாகவும், தோல்வியடைந்த  வேட்பாளரை வெற்றி பெற்றதாகவும் அறிவிப்பது போன்ற ஜனநாயகப் படுகொலைகள் பலமுறை நடந்துள்ளன. இப்படி செய்வதன் மூலம் தமிழகத்தை ஆளும் கட்சிகள் தங்கள் வலிமையை குறுக்கு வழியில் நிரூபிக்கும்.

ஆனால், தமிழ்நாட்டு வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், வேட்பு மனுத் தாக்கலின் போதே, எதிர்க்கட்சி வேட்பாளர்களை மிரட்டி மனுத்தாக்கல் செய்ய விடாமல் தடுப்பது, அதையும் கடந்து களத்தில்  இறங்கிய வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுவை இல்லாத காரணங்களைக் கூறி தள்ளுபடி செய்ய வைப்பது என அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. 

அத்தனை அடக்குமுறைகளையும் கடந்து  மனுத்தாக்கல் செய்த வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களை கடத்திச் சென்று, அவர்களின் தொழில்களை அழித்து விடுவதாகவும், குடும்பத்தினரை கொன்று விடுவதாகவும் கூறி மிரட்டும் புதிய கலாச்சாரம் தமிழக அரசியலில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. வேட்பாளர்களை பணத்தால் அடிக்கும் வித்தையும் பல இடங்களில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. தங்களின் செல்வாக்கு மீதும், மக்கள் மீதும் நம்பிக்கையற்றோர் நடத்தும் இத்தகைய தாக்குதல்களில் ஜனநாயகம் தப்பிப் பிழைக்குமா? என்ற ஐயம் எழுந்திருக்கிறது.

ஆனால், இந்த அடக்குமுறைகளுக்கு அப்பாற்பட்ட கட்சி தான் பாட்டாளி மக்கள் கட்சி. சமூகநீதிக்காக  1980-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட வன்னியர் சங்கம், 1989-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்படும் வரை, சந்திக்காத அடக்குமுறைகள் எதுவுமில்லை. 

சாலை மறியல் போராட்டத்தின் போது காவல்துறையினரின் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையிலும் அரசாங்க அடக்குமுறைகளுக்கு பணிய மறுத்து முழங்கி வீரச்சாவடைந்த சித்தணி ஏழுமலை, முண்டியம்பாக்கம் சிங்காரவேலு, ஒரத்தூர் ஜெகநாதன், கயத்தூர் முனியன், கயத்தூர் முத்து, கயத்தூர் தாண்டவராயன், கோலியனூர் கோவிந்தன், கோலியனூர் விநாயகம், தொடர்ந்தனூர் வேலு, சிறுதொண்டமாதேவி தேசிங்கு போன்றவர்கள் தான் நமது வீரத்திற்கும், தியாகத்திற்கும் எடுத்துக்காட்டுகள். 

அவர்களுக்கு இணையான வீரமும், தியாகமும் கொண்டவர்கள் தான் இப்போதும் பாமகவுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் வீரச் சிங்கங்கள். அவர்கள் இப்போது மட்டுமல்ல.... எப்போதும் அடக்குமுறைக்கு அஞ்சாமல் களமாடும் சிங்கங்கள்.

நன்கு முற்றிய நெல்மணிகளுக்கு நடுவே தவிர்க்கவே முடியாத சில பதர்களும் இருப்பது வாடிக்கை  தானே. நம்மிலும் பல பதர்கள் உள்ளன. அதை நானும் நன்றாக அறிவேன். அத்தகைய பதர்களுக்கு கட்சியில் இடமில்லை. கட்சிக்கு துரோகம் செய்த சிறுநரிகளுக்கும் கட்சியில் இடமில்லை. 

சிங்கங்களும், சிறுநரிகளும் ஒன்றாக வாழ முடியாது; நெல்மணிகளின் மூட்டையில் பதர்களுக்கு இடமில்லை. நெல்மணிகளை புடைக்கும் போது பதர்கள் பறந்து போய்விடும். சிறுநரிகளின் முகத்திரை விலகும் போது அவற்றை சிங்கங்கள் விரட்டியடித்து விடும். இவை அனைத்தும் இன்னும் சில நாட்களில் செய்து முடிக்கப்பட்டுவிடும்.

இந்தப் பணிகளையெல்லாம் செய்து முடிக்க வேண்டியது கட்சித் தலைமையின் பணி. அதை கட்சித் தலைமை கவனித்துக் கொள்ளும். பாட்டாளியான நீ செய்ய வேண்டியது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நமது வேட்பாளர்களின்  வெற்றிகளை உறுதி செய்ய உழைப்பது தான். உள்ளூர் மக்களின் தேவைகள் என்ன? என்பதும், அவற்றை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளும் உனக்குத் தெரியும். அவற்றை மக்களிடம் எடுத்துக் கூறினாலே, அவர்களின் ஆதரவைப் பெற்று வெற்றியைக் கைப்பற்றி விட முடியும்.

பாட்டாளி மக்கள் கட்சி தான் மக்கள் பிரச்சினைகளுக்கான முதன்முதலில் குரல் கொடுக்கும் கட்சி என்ற உண்மையையும், பாட்டாளி மக்கள் கட்சியால் தான் மக்கள் நலன் சார்ந்த பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டிருக்கின்றன என்பதையும் மக்களிடம் எடுத்துக் கூறி மாம்பழத்திற்கு வாக்கு கேளுங்கள்.

மீண்டும் சொல்கிறேன்....

தடைகளை தகர்ப்பதும், அடக்குமுறைகளை உடைப்பதும் நமது பிறவி குணங்கள். எனவே, அனைத்து  முட்டுக்கட்டைகளையும் நொறுக்கித் தள்ளி மக்களிடம் செல்லுங்கள்... அவர்களின் மனங்களை வெல்லுங்கள்... மாம்பழம் சின்னத்தில் வாக்குகளை அள்ளுங்கள். நகர்ப்புறங்களும் நமதே என்பதை நிரூபிக்கும் வகையில் தேர்தல் பணியாற்றும்படி பாட்டாளி சொந்தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்." 

இவ்வாறு அந்த கடிதத்தில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Ramadoss Letter To Pattali peoples


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->