மேட்டூர் அணை திறக்க வாய்ப்பில்லை: உழவர்களுக்கு குறுவைத் தொகுப்புடன்  ரூ.5000 மானியத்தையும் வழங்க வேண்டும் - அன்புமணி இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


 

பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாலும்,  தென்மேற்கு பருவமழை  தீவிரமடைவதற்கான வாய்ப்புகள் தென்படாததாலும்  காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படாது என்பது உறுதியாகி விட்டது. இத்தகைய சூழலில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி குறுவை சாகுபடி  செய்யத் தேவையான உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12&ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால், 93.47 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில், இன்றைய நிலவரப்படி வெறும் 41.60 டி.எம்.சி, அதாவது 79 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது.  

அணையிலிருந்து பாசனத்திற்கு   தண்ணீர் திறக்க வேண்டும் என்றால், அணையின் நீர்மட்டம் 90 அடிக்கும் கூடுதலாக உயர்வதுடன், அணைக்கு ஒரு நாளைக்கு ஒன்றரை டி.எம்.சி அளவுக்கு தண்ணீர் வந்தால் தான் குறுவை சாகுபடி காலம் முழுமைக்கும் தண்ணீர் வழங்க முடியும். அதற்கு இன்னும் குறைந்தது  12 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படுவதுடன்,  வினாடிக்கு குறைந்தது 18 ஆயிரம் கன அடி வீதம் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வர வேண்டியது கட்டாயமாகும்.

ஆனால், இன்றைய நிலையில் கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள  கிருஷ்ணராஜ சாகர் அணையில் 11.49 டி.எம்.சி, கபினி அணையில் 4.47 டி.எம்.சி, ஹாரங்கி அணையில் 2.97 டி.எம்.சி, ஹேமாவதி அணையில் 11.41 டி.எம்.சி என மொத்தம் 33.45 டி.எம்.சி மட்டுமே தண்ணீர் உள்ளது. 4 அணைகளின் மொத்தக் கொள்ளளவான 114.57 டி.எம்.சியில் 29.08 %  மட்டுமே என்பதால் இருக்கும் நீரை கர்நாடகம் திறந்து விட வாய்ப்பில்லை. 

கடந்த ஆண்டு குறுவை பருவத்தின் போது தான், அதற்கு முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.13 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. நடப்பாண்டில் உரிய காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்படாவிட்டால், குறுவை நெல் சாகுபடி செய்யப்படும் பரப்பு 3 லட்சம் ஏக்கருக்கும் கீழாக குறைந்து விடும். இதனால் உழவர்களுக்கு வருவாய் இழப்பும், தொழிலாளர்களுக்கு வேலையிழப்பும் ஏற்படும்.

இந்த பாதிப்புகளை ஓரளவுக்காவது கட்டுப்படுத்த வேண்டும் என்றால் நிலத்தடி நீரை  பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்வதும், அதற்காக உழவர்களுக்கு உதவ வேண்டியதும் அரசின் கடமை ஆகும். இதற்காக  காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட  தமிழகம் முழுவதும் உள்ள  உழவர்களுக்கு விதைகள், உரங்கள், நுண்ணூட்ட சத்துகள் உள்ளிட்டவற்றை மானியத்தில் வழங்கும் குறுவைத் தொகுப்புத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். கடந்த ஆட்சியில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மட்டுமே குறுவைத் தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் உச்சவரம்பின்றி அனைவருக்கும் குறுவைத் தொகுப்பு வழங்கப்பட வேண்டும்.

அத்துடன்  24 மணி நேரமும் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கவும்,  இடுபொருள் மானியமாக  ஏக்கருக்கு  ரூ.5,000 வீதம்  வழங்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pmk anbumani ramadoss tvk govt mettur dam open issue


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->