கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வணிக மால் அமைக்க கூடாது... அன்புமணி இராமதாஸ் பரபரப்பு அறிக்கை! - Seithipunal
Seithipunal


பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை கோயம்பேட்டில் உள்ள புறநகர் பேருந்து நிலையத்தின் பயன்பாடு விரைவில் முடிவுக்கு வரவிருக்கும் நிலையில், பேருந்து நிலையம் அமைந்துள்ள 36 ஏக்கர் நிலத்தில் வணிக மால் அமைக்கலாம் என்பது உள்ளிட்ட 3 திட்டங்களை சி.எம்.டி.ஏ எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் உருவாக்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மால் அமைப்பது உள்ளிட்ட இரு திட்டங்கள் வணிக நோக்கம் கொண்டவை என்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அத்திட்டங்களை அரசு ஏற்கக் கூடாது.

சென்னை கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த பெரும்பாலான பேருந்துகள் அங்கு மாற்றப்பட்டன. சென்னை குத்தம்பாக்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பிறகு மீதமுள்ள பேருந்துகளும் அங்கு மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்பின் இப்போது கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்திருக்கும் 36 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில், 1. நகர்ப்புற பசுமைப் பூங்கா அமைக்கலாம், 2. வணிக வளாகங்கள், அலுவலங்கள், திரையரங்குகள், உணவகங்கள் மற்றும் பசுமைவெளி கொண்ட வளாகம் அமைக்கலாம், 3. பிரமாண்ட வணிக மால் அமைக்கலாம் என்பன உள்ளிட்ட 3 திட்டங்களை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தயாரித்து இருப்பதாகவும், விரைவில் அரசின் ஆய்வுக்காக அத்திட்டங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

முந்தைய திமுக ஆட்சியில் ஆளுங்கட்சிக்கு நெருக்கமாக இருந்த பன்னாட்டு நிறுவனத்திற்கு அந்த இடத்தை தாரை வார்க்கவும், அந்த இடத்தில் மிகப்பிரமாண்டமாக வணிக மால் அமைக்க அந்த நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி குரல் கொடுத்ததுடன், 10 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்தையும், பரப்புரை இயக்கத்தையும் மேற்கொண்டது. அதன் பயனாகத் தான் கோயம்பேடு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள நிலத்தில் மால் மட்டும் தான் அமைக்கப்படும் என்ற நிலைப்பாட்டில் இருந்து மாறி பசுமைப் பூங்கா அமைப்பது உள்ளிட்ட மேலும் இரு திட்டங்களையும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் உருவாக்கியுள்ளது. ஆனாலும், பிரமாண்ட மால் அமைக்கும் யோசனையை இன்னும் வலியுறுத்துவது திமுக அரசின் சிந்தனை தான்.

எந்த வகையில் பார்த்தாலும் கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்துள்ள இடத்தையும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் சேர்த்து மொத்தம் 66 ஏக்கர் பரப்பளவில் பசுமைப்பூங்கா அமைப்பது தான் சரியான நடவடிக்கையாக இருக்கும். “சென்னையில் ஒரு தனி மனிதருக்கான பசுமை நிலப்பகுதி (Per capita green cover) 1.03 சதுர மீட்டராகவும் உள்ளது. மேலும் சென்னைப் பெருநகரின் பசுமை வெளியானது, வனப்பகுதி, பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், திறந்த வெளித்திடல்கள் என அனைத்தும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக சென்னையின் பரப்பில் வெறும் 6.7 விழுக்காடாகத் தான் உள்ளது” என்பதை முந்தைய அரசே ஒப்புக் கொண்டுள்ளது. இந்த நிலைமையை மாற்றவும், சென்னையின் தனிநபர் பசுமை நிலப்பகுதியை அதிகரிக்கவும் கோயம்பேட்டில் பசுமைப் பூங்கா அமைப்பது மிகச்சிறந்த வாய்ப்பு ஆகும்.

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இருதய நோய்கள், அதீத உடல்பருமன் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகமாகி வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்துவதற்கும் மக்களின் உடலுழைப்பு வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் பூங்காக்கள் தேவை. அதனால், சென்னையின் பசுமைப்போர்வை பரப்பு குறைந்து விட்ட நிலையில் அதை ஈடுகட்ட புதிய பூங்காக்களை உருவாக்குவது மிகவும் அவசியமாகும். அது மட்டுமின்றி, சென்னையில் பெரிய பூங்காக்கள் இல்லை. டெல்லியில் மெஹ்ராலி பூங்கா 200 ஏக்கரிலும் லோதி பூங்கா 90 ஏக்கரிலும் அமைந்துள்ளன. இவை தவிர புதுடெல்லியின் பதர்பூர் பகுதியில் ஆசியாவின் மிகப்பெரிய பூங்கா 880 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது. பெங்களூரில் லால்பாக் பூங்கா 240 ஏக்கரிலும், கப்பன் பூங்கா 100 ஏக்கரிலும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், சென்னையில் அத்தகைய பூங்காக்கள் இல்லை.

கிண்டியில் சென்னை ரேஸ் கிளப்பிடமிருந்து மீட்கப்பட்ட இடத்தில் 118 ஏக்கரில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டு வரும் போதிலும், சென்னையின் தேவைக்கு அது போதுமானதல்ல. அதுமட்டுமின்றி, கோயம்பேடு, அண்ணா நகர் போன்ற பகுதிகளையொட்டிய புறநகர் பகுதி வேகமாக விரிவடைந்து வரும் நிலையில், கோயம்பேட்டில் பசுமைப்பூங்காவை அரசு அமைப்பது தான் மிகச்சரியான முடிவாக இருக்கும்.

கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ள பகுதி பசுமைப் பூங்காவாக மாற்றப்பட்டால், அண்ணா நகர், கோயம்பேடு, முகப்பேர், அம்பத்தூர், பெரம்பூர், வடபழனி, கோடம்பாக்கம், அரும்பாக்கம், சூளைமேடு, அசோக்நகர், வளசரவாக்கம், விருகம்பாக்கம், சாலிகிராமம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயனடைவர். அவர்களுக்கு நடைபயிற்சியும், உடற்பயிற்சியும் செய்ய பசுமைச் சூழலுடன் கூடிய வளாகம் கிடைக்கும். இதற்கெல்லாம் மேலாக இந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களின் குழந்தைகளுடன் வந்து ஆரோகியமான சூழலில் பொழுதுபோக்குவதற்கும் கோயம்பேடு பசுமைப் பூங்கா பெருமளவில் பயன்படும்.

எனவே, சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 3 திட்டங்களில் மால் அமைக்கும் திட்டம், வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் அமைக்கும் திட்டம் ஆகியவற்றை புதிய அரசு கைவிட வேண்டும். மாறாக, சென்னை புறநகர் பேருந்து நிலையம் அமைந்துள்ள 36 ஏக்கர், அதைச் சுற்றியுள்ள ஆம்னி பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதி உள்ளிட்ட 30 ஏக்கர் என மொத்தம் 66 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பெரிய அளவில் பசுமைப்பூங்காவை அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pmk Anbumani Ramadoss koyambedu bus stand issue


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->