தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணம்.! 7 அடுக்கு பாதுகாப்பில் சென்னை.!!
PM Modi 2 Days Visit to Tamilnadu
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் 44 வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நாளை மறுநாள் குஜராத்தில் இருந்து சென்னை வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி வருகை ஒட்டி சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையான எஸ் பி ஜி குழுவை சார்ந்த 60 பேர் டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ளனர். இந்த சிறப்பு படையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து விமான நிலையம், நேரு உள்விளையாட்டு அரங்கம், அண்ணா பல்கலைக்கழகம், பிரதமரின் ஹெலிகாப்டர் தரையிறங்கும் அடையாறு ஐ என் எஸ் தளம் ஆகிய இடங்களில் செய்ய வேண்டிய பாதுகாப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ் பி ஜி உயர் பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதில், மத்திய தொழில் பாதுகாப்பு படை, விமான பாதுகாப்பு படை, விமான நிலைய உயர் அதிகாரிகள், சென்னை மாநகர உயர் போலீஸ் அதிகாரிகள், தமிழக அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சென்னையிலிருந்து பிரதமர் புறப்படும் வரை சென்னை விமான நிலையத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை விமான நிலையம் முழுவதும் 7 அடுக்கு பாதுகாப்பு முறை கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் முழுவதும் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ளது.
English Summary
PM Modi 2 Days Visit to Tamilnadu