மீண்டும் சறுக்கிய ஓபிஎஸ்! ஆதரவாளர் வீட்டில் பிடிபட்ட ஆவணங்கள்! - Seithipunal
Seithipunal


நாளுக்கு நாள் பலம் பெறும் இபிஎஸ் தரப்பு! கட்சியை தொடர்ந்து சொத்துக்களும் இபிஎஸ் வசமாகிறதா!

கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக் குழு கூட்டத்தை புறக்கணித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்தை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டார். அப்பொழுது நடந்த கலவரத்தில் அதிமுக அலுவலகம் மற்றும் பொது சொத்துக்கள் சேதமானது. அதிமுக அலுவலக கலவரம் தொடர்பாக நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ஓபிஎஸ் தரப்பில் ஒரு வழக்கும், இபிஎஸ் தரப்பில் ஒரு வழக்கும், ஓபிஎஸ் ஆதரவாளர் தரப்பில் ஒரு வழக்கும் மற்றும் ராயப்பேட்டை போலீசார் சார்பில் ஒரு வழக்கும் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை போலீசார் விசாரணை மேற்கொள்ளாததை அடுத்து அதிமுக சார்பில் சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதிமுக அமைப்பு செயலாளர் சி.வி சண்முகம் அதிமுக அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் அனைத்தும் திருடப்பட்டு விட்டதாகவும் புகார் அளித்தார். இந்த புகாரின் பெயரில் ஓபிஎஸ் உட்பட அவர் ஆதரவாளர்கள் 60 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த கலவரம் வழக்கானது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார் முதலில் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட தடைங்களையும் ஆதாரங்களையும் சேகரித்தனர். பின்னர் அதிமுக அலுவலக மேலாளர் சரவணன் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி அவர் தரப்பு விளக்கங்களை அளித்தார். 

இதனை தொடர்ந்து மீண்டும் அதிமுக அலுவலகம் சென்ற சிபிசிஐடி போலீசார் அதிமுக அலுவலக பணியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதேபோல் ஓபிஎஸ் தரப்பில் அவரது ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இடம் விசாரணை நடத்தினர். அதே நாளில் அதிமுக அமைப்புச் செயலாளர் சிவி சண்முகம் சிடிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் திருடப்பட்ட 113 ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த 113 ஆவணங்களில் ராயப்பேட்டை தலைமை அலுவலக பத்திரம், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் மனைவி ஜானகி அம்மாள் எழுதிக் கொடுத்த பத்திரம், அறிஞர் அண்ணா அறக்கட்டளையின் ஆவணம், மற்றும் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் பல்வேறு பகுதியில் உள்ள அதிமுகவின் சொத்துக்களின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மீட்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து சிபிசிஐடி போலீசார் கைப்பற்றியுள்ளனர். 

கைப்பற்றப்பட்ட அனைத்து ஆவணங்களும் சரிபார்ப்பும் பணிகள் நிறைவடைந்து உள்ள நிலையில் அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என இரண்டு நபர் அமர்வு தீர்ப்பு வழங்கியதால் தற்பொழுது பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தொடர்கிறார். தற்பொழுது உள்ள நிலையில் அதிமுக கட்சி ஈபிஎஸ் வசம் உள்ளது. 

எனினும் ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இதனால் அதிமுகவின் சொத்து ஆவணங்கள் அனைத்தையும் இபிஎஸ் தரப்பிற்கு வழங்குவது சந்தேகம் தான். இருந்தாலும் திருடப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் கிடைத்ததால் இதை இபிஎஸ் தரப்பில் வெற்றியாகவே கருதுவார்கள்.

ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து ஆவணங்களை கைப்பற்றியுள்ளதால் ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஓபிஎஸ் தரப்பு சறுக்கலை சந்தித்துள்ளது.

பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் இபிஸ்க்கு ஆதரவாக இருப்பதால் அவர் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கட்சியும் கட்சி சம்பந்தப்பட்ட சொத்து ஆவணங்களும் இபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. சொத்து ஆவணங்களை யாரிடம் ஒப்படைப்பது என நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS that slipped again Documents caught in the supporter house


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->