தனி ஒருவனாக மாஸ் என்ட்ரி தந்த ஓபிஎஸ்!
OPS that gave the mass entry alone in tamilnadu assembly
சட்டப்பேரவை தலைவரை சந்திக்கும் அதிமுக கொறடா எஸ்.பிவேலுமணி!
அதிமுகவில் ஏற்பட்ட உட் கட்சி பிரச்சனை காரணமாக ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதுடன் அவரது சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக இபிஎஸ் சார்பில் இருந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இது சம்பந்தமாக இபிஎஸ் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். மேலும் தமிழக அரசின் சட்டப்பேரவை அலுவலர் ஆய்வுக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்ற முறையில் ஆர்.பி உதயகுமாரை பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். மேலும் ஓபிஎஸ் தரப்பில் இருந்து அதிமுக கட்சி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என சபாநாயகருக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த கடிதங்கள் மீது சபாநாயகர் எந்தவித முடிவும் எடுக்காத நிலையில் இன்று சட்டப்பேரவை கூடியது.
இந்த நிலையில் அதிமுக தரப்பில் இருந்து ஓபிஎஸ் அணியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டும் சட்டப்பேரவைக்கு வருகை புரிந்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் உடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மற்றும் ஐயப்பன் ஆகியோர் தலைமைச் செயலகத்திற்கு வந்தனர். அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் அமர்ந்தனர். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்து சட்டமன்ற பேரவை நிகழ்வில் கலந்து கொண்டார். ஓபிஎஸ் அருகில் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் இருக்கை காலியாக இருந்தது. அதிமுக சார்பில் தனி ஒருவனாக அந்த இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்திருந்தார்.
முதல் நாள் சட்டமன்ற கூட்டத்தை இபிஎஸ் தரப்பினர் புறக்கணித்துள்ளனர். சபாநாயகர் வெளியிட்டுள்ள சட்டமன்ற அலுவல் ஆய்வு குழு உறுப்பினர்கள் பட்டியலில் இருந்து பன்னீர்செல்வம் நீக்கப்படாததால் இத்தகைய முடிவை இபிஎஸ் தரப்பு எடுத்துள்ளதாக தெரிய வருகிறது. மேலும் அதிமுகவின் கொறடா எஸ்.பி வேலுமணி இது சம்பந்தமாக சபாநாயகர் அப்பாவுவை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சந்திப்பின் போது சபாநாயகர் தரப்பிலிருந்து அளிக்கப்படும் விளக்கத்தின் அடிப்படையில் நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடரை இபிஎஸ் அணியினர் பங்கேற்பார்களா அல்லது புறக்கணிப்பார்களா என்பது தெரியவரும்.
English Summary
OPS that gave the mass entry alone in tamilnadu assembly