திமுக அரசுக்கு ஓ பன்னீர்செல்வம் முக்கிய கோரிக்கை.!! - Seithipunal
Seithipunal


ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வுகாலப் பயன்களை காலந்தாழ்த்தாமல் வழங்க தி.மு.க. அரசை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் போக்குவரத்து பணியாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தி.மு.க., ஆட்சியமைத்து பத்து மாதங்கள் ஆகியுள்ள நிலையில் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாததோடு மட்டுமல்லாமல், ஓய்வு பெற்றவர்களுக்கு அளிக்க வேண்டிய ஓய்வூதியப் பயன்களையும், அகவிலைப் படியையும்கூட தராமல் இழுத்தடித்து வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற , போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, விடுப்புத் தொகை ஏதும் வழங்கப்படாத சூழ்நிலை தற்போது நிலவுவதாகவும், கொரோனா நோய்த் தொற்று வெகுவாக குறைந்து இயல்பு நிலைக்கு தமிழ்நாடு வந்துள்ள போதிலும், 2020-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் தமிழ்நாடு அரசின் வருவாயும், போக்குவரத்துக் கழகங்களின் வருவாயும் ஓரளவு உயர்ந்து வருகின்ற நிலையிலும், போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஓய்வூதியப் பயன்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு தெரிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. '

கொரோனா நோய்த் தொற்று வெகுவாக குறைந்து விட்டதால் ஓய்வூதியப் பயன்கள் விரைவில் கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் தங்கள் குழந்தைகளின் உயர் கல்வி, திருமணம் போன்றவற்றை கடன் வாங்கி போக்குவரத்துத் தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இப்போது வாங்கிய கடனுக்கான வட்டியைக் கூட செலுத்த முடியாத துர்ப்பாக்கிய நிலைமைக்கு போக்குவரத்துத் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் ஓய்வூதியப் பயன்கள் வந்தவுடன் தங்கள் குழந்தைகளுக்கு திருமணத்தை நடத்த உத்தேசித்துள்ளனர். இன்னும் சிலர் மருத்துவத்திற்கு பணமில்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றோர் நிலைமை பரிதாபகரமாக உள்ளது. தற்போது பணியில் உள்ளவர்கள், தங்களுக்கும் நாளை இதே நிலைமை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.

நியாயமாக, சட்டப்படி கொடுக்க வேண்டிய ஓய்வு காலப் பயன்களையும், அகவிலைப்படியையுமே அளிக்காத நிலையில், மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் என்ற தி.மு.க. அரசின் வாக்குறுதி கேள்விக்குறியாகிவிட்டது. இந்த வாக்குறுதி போக்குவரத்துத் தொழிலாளர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக என்பது தற்போது நிலைநாட்டப்பட்டு விட்டது. தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற என்ற மன நிலைக்கு போக்குவரத்துத் தொழிலாளர்களும், ஓய்வூதியதாரர்களும் வந்துவிட்டார்கள்.

இருப்பினும், சட்டப்படி போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வழங்க ' வேண்டிய பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, விடுப்பு ஊதியம் ஆகியவை கட்டாயம் வழங்கப்பட வேண்டும். இதற்கான நிதி அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இல்லை என்றாலும், இதற்குத் தேவையான நிதியை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு உண்டு.

எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஓய்வுகாலப் பயன்களை உடனடியாக வழங்க ஆவன செய்திடுமாறு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops statement on mar 7


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->