அவசர சட்டம்: தமிழக பெற்றோர்கள் உடனே செய்யவேண்டியது இதுதான்.! வெளியான பரபரப்பு அறிக்கை.!
online rummy issue
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பாட்டாளி மக்கள் கட்சியினர் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் உட்பட பல அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதனை அடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதாக அறிவித்தார். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு, இந்த அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ஆளுநர் கையெழுத்திட்டுள்ளார். இதனால் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தமிழகத்தில் இருந்து தற்போது முதல் தடை செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த அவசர சட்டத்தின்படி,
* ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருந்தால் ரூ.10000 அபராதம்.
* 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை.
* தடையை மீறி விளையாடினால் ரூ.5000 அபராதம்,
* 6 மாதம் சிறை தண்டனையும் வழங்கப்படும்.
* பணம் வைத்து விளையாடுவோரின் கணினி, செல்போன் மற்றும் அது தொடர்பான உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெற்றோர்கள் குழந்தைகளை செல்போனில் விளையாட அனுமதிக்காதீர்கள் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் அறிவுரை வழங்கி ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நாடெங்கும் தற்போது நிலவி வரும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை பல்வேறு மக்கள் தங்களது வாழ்க்கையின் வளர்ச்சி பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் ஒரு சிலரின் அதீத ஆசையும் திரைப்படங்களை பார்த்து உடனடியாக பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என்ற பேராசையாலும் ஆன்லைன் சூதாட்டம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். இதன் விளைவு தாங்கள் நினைத்த பரிசு பொருளை அடைய முடியவில்லையே என்ற மன உளைச்சலில் தாங்கள் மேற்படி ஆன்லைன் விளையாட்டிற்கு செலவு செய்த பணத்தை ஈட்ட முடியவில்லையே என்ற மன வேதனைக்கும் ஆளாகின்றனர்.
இதன் விளைவு அவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மேலும் தமிழகத்தில் இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில இடங்களில் நடந்துள்ளது. இதற்கு மேலாக பல வீடுகளில் பெற்றோர்கள் பலர் தங்களது குழந்தைகளுடன் விளையாட நேரம் ஒதுக்காமல் அவர்களுக்கு தங்களின் செல்போனை கொடுத்து பழகி குழந்தைகளை தவறான வழிக்கு செல்ல வாய்ப்பு அளிக்கின்றனர்.
பெற்றோரின் செல்போன்களை குழந்தைகளுக்கு கொடுத்து விட்டாள், அவர்கள் தொந்தரவு செய்யாமல் அமைதியாக இருக்கிறார்கள் என்று நினைக்கின்றனர். ஆனால் குழந்தைகள் செல்போன்களை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை பெற்றோர்கள் கவனிப்பதில்லை. எனவே பெற்றோர் தங்களது செல்போனில் பொழுதுபோக்காக செல்போனில் விளையாடினாலும் சரி, குழந்தைகளுக்கு விளையாட கொடுத்தாலும் சரி இழப்பு அவர்களது குடும்பத்திற்கு என்பதை உணர வேண்டும்.
இதனால் பொதுமக்கள் தமிழக காவல்துறை சார்பில் அவ்வப்போது ஆன்லைன் சூதாட்டங்கள் குறித்தும் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்தல் குறித்தும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவற்றை அறிந்து காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எனவே பெற்றோர்கள் ஆகிய நீங்களும் செல்போனில் விளையாடாதீர்கள். உங்கள் குழந்தைகளையும் செல்போனில் விளையாட அனுமதிக்காதீர்கள்." என்று தெரிவித்துள்ளார்.