ஶ்ரீவைகுண்டத்தில் தவெக இளைஞரணி நிர்வாகிகளால் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; ஆனானப்பட்ட திமுகவையே மிஞ்சிவிட்டது தவெக; நயினார் நாகேந்திரன்..!
Nainar Nagendran condemns the gang rape of a young woman by TVK youth wing functionaries in Srivaikuntam
''ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் மமதையில் பெண்களை பாலியல் ரீதியாக வேட்டையாடுவதிலும், பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி பணிய வைக்க முயல்வதிலும் ஆனானப்பட்ட திமுகவையே மிஞ்சிவிட்டது தவெக'' என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;
''தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் பகுதியில், தவெக இளைஞரணி நிர்வாகிகளால் இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், இதுகுறித்து புகாரளிக்கக் கூடாது என அப்பகுதி தவெக எம்எல்ஏ சரவணன் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டுவதாகவும் வெளியாகியுள்ள செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது.
ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் மமதையில் பெண்களை பாலியல் ரீதியாக வேட்டையாடுவதிலும், பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி பணிய வைக்க முயல்வதிலும் ஆனானப்பட்ட திமுகவையே மிஞ்சிவிட்டது தவெக. ஊரில் உள்ள குற்றவாளிகளை எல்லாம் பொறுக்கியெடுத்து அமைச்சர் பதவியில் அமர்த்தினால், குற்றங்களை எப்படி ஒடுக்க முடியும்? குற்றவாளிகளுக்கு எப்படி பயமிருக்கும்?
ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பெண்களின் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண் படையெல்லாம் அமைப்பதாக விளம்பரம் தேடிய முதல்வர் ஜோசப் விஜய், தனது சொந்தக் கட்சிக்குள்ளேயே பாலியல் குற்றவாளிகளை வைத்து பாதுகாத்துக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, இச்சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் தவெக எம்எல்ஏ சரவணனை முறையாக விசாரித்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கடும் தண்டனைப் பெற்றுத் தருவதோடு, தனது கட்சியில் உள்ள குற்றப் பின்னணிக் கொண்டவர்களை கண்காணிப்பு வளையத்தில் வைக்க வேண்டுமென முதல்வர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Nainar Nagendran condemns the gang rape of a young woman by TVK youth wing functionaries in Srivaikuntam