திருச்சியில் நாம் தமிழர் மாநாடு: 234 வேட்பாளர்கள் ஒரே மேடையில்.. திராவிட அரசியலுக்கு முற்றுப்புள்ளி? சீமான் வகுக்கும் வியூகம்!
Naam Tamilar Conference in Trichy 234 candidates on one platform End of Dravidian politics Seeman strategy
திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்தி வரும் நாம் தமிழர் கட்சி, இன்று திருச்சியில் “மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு” என்ற பெயரில் மிகப்பெரிய பொதுக்கூட்டத்தை நடத்துகிறது. இந்த மாநாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், மாநில அரசியல் களம் உற்று நோக்கி வருகிறது.
2016 சட்டமன்றத் தேர்தலில் சுமார் ஒரு சதவீத வாக்குகளுடன் தொடங்கிய நாம் தமிழர் கட்சி, 2024 மக்களவைத் தேர்தலில் 8.2 சதவீத வாக்குகளைப் பெற்றது. கூட்டணி இல்லாத தனித்துப் போட்டி என்ற நிலைப்பாட்டை தொடர்ச்சியாக கடைப்பிடித்து வந்ததற்கான அரசியல் அங்கீகாரமாக இதை கட்சி தரப்பு பார்க்கிறது.
பெண்கள்–ஆண்கள் சம வாய்ப்பு என்ற அடிப்படையில் வேட்பாளர்களை அறிவிக்கும் நடைமுறையையும் சீமான் வலியுறுத்தி வருகிறார். எழும்பூர், ஆர்.கே.நகர், வேளச்சேரி உள்ளிட்ட நகர்ப்புற முக்கியத் தொகுதிகளில் இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது, கட்சியின் புதிய தலைமுறை ஆதரவை வலுப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
இம்மாநாடு வெறும் வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி மட்டுமல்ல; ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை விமர்சிக்கும் அரசியல் மேடையாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடன் இல்லாத பொருளாதாரம், அரசுப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளின் தரம், மாநில வளங்கள் ஆகியவை குறித்து சீமான் தொடர்ந்து முன்வைத்து வரும் கேள்விகள் இந்த மாநாட்டிலும் பிரதான அம்சங்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
அதே நேரத்தில், இந்த தேர்தல் சீமானுக்கு சவாலானதாக இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர். வலுவான கூட்டணிகளை அமைத்துள்ள திராவிடக் கட்சிகள், மேலும் புதிய அரசியல் வரவுகளின் தாக்கம் ஆகியவற்றுக்கு மத்தியில், வாக்கு சதவீதத்தை சட்டமன்ற இடங்களாக மாற்றுவது முக்கிய சவாலாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் வருகை, மாற்று அரசியல் வாக்காளர்களில் போட்டியை அதிகரித்துள்ளது. தொடக்கத்தில் விஜய்யை வரவேற்ற சீமான், பின்னர் விமர்சன நிலைப்பாட்டை எடுத்தது அரசியல் கவனத்தை பெற்றது. இளைஞர் ஆதரவை நோக்கி இரு தரப்பும் நகரும் சூழலில், இந்த மோதல் யாருக்கு பலன் தரும் என்பது தேர்தல் முடிவுகளால் தீர்மானிக்கப்படும்.
வாக்கு சதவீத வளர்ச்சி தொடர்ந்தாலும், அது வெற்றி இடங்களாக மாறுமா என்பது நாம் தமிழர் கட்சியின் அடுத்த கட்ட அரசியல் பயணத்தை நிர்ணயிக்கும். திருச்சி மாநாடு அதன் திசையை தெளிவுபடுத்தும் முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது.
English Summary
Naam Tamilar Conference in Trichy 234 candidates on one platform End of Dravidian politics Seeman strategy