மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து மாநில செயலாளர் மூகாம்பிகா ரத்தினம் விலகல்..!
Mookambika Rathinam quits Makkal Needhi Maiam as State Secretary
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாகவும், பெண்கள் முன்னேற்றம், குழந்தைகள் நலம் மற்றும் சமூக நலன் சார்ந்த பொதுச் சேவைகளில் எனது பணி தொடர்ந்து நீடிக்கும் என மாநில செயலாளர் மூகாம்பிகா ரத்தினம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது;
''கடந்த ஏழு ஆண்டுகளாக மக்கள் நீதி மய்யம் கட்சியில் பணியாற்றிய அனுபவம், எனது அரசியல் மற்றும் சமூகப் பயணத்தில் மிக முக்கியமான அத்தியாயமாக அமைந்துள்ளது. அரசியலின் அரிச்சுவடியை எனக்குக் கற்றுக் கொடுத்த ஆசானாக தாங்கள் இருந்தீர்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
குறிப்பாக, மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணி மாநிலச் செயலாளராகப் பணியாற்றிய காலகட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன், சமூக முன்னேற்றம் மற்றும் கட்சியின் வளர்ச்சிக்காக முழு அர்ப்பணிப்புடனும் நேர்மையுடனும் செயல்பட்டேன்.
மேலும், தங்களின் பேராதரவுடனும் நம்பிக்கையுடனும் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற்றேன். அந்தத் தேர்தலில் சுமார் 60,000 வாக்குகளைப் பெற்று, மக்கள் மத்தியில் கட்சியின் கொள்கைகளையும் இலட்சியங்களையும் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டது. எனக்கு மிகுந்த பெருமையாகும்.
இந்தப் பயணத்தில் உறுதுணையாக இருந்த கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆழ்ந்த சிந்தனை மற்றும் பரிசீலனைக்குப் பிறகு, எனது எதிர்கால அரசியல் மற்றும் சமூகப் பணிகளை கருத்தில் கொண்டு, கட்சியிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன்.
இந்த முடிவு எவ்வித அவசரத்திலும் அல்லது உணர்ச்சி வசப்பட்ட நிலையிலும் எடுக்கப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனது அரசியல் பயணத்தில் உறுதுணையாக இருந்த தலைவர், துணைத் தலைவர்கள், மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்கள் முன்னேற்றம், குழந்தைகள் நலம் மற்றும் சமூக நலன் சார்ந்த பொதுச் சேவைகளில் எனது பணி தொடர்ந்து நீடிக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Mookambika Rathinam quits Makkal Needhi Maiam as State Secretary