ஆளும்கட்சிக் கொடி பறக்கலாம்... அடுத்த கட்சிக்கொடி பறக்கக்கூடாதா? பாகுபாடு பார்க்கும் திமுக அரசுக்கு கண்டனம்!
MNM Condemn to DMK Govt 8122022
மக்கள் நீதி மய்யம் ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு மாநில செயலாளர் முரளி அப்பாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கையில், "நேற்று திண்டுக்கல் சென்ற எங்கள் கட்சி மாநில செயலாளர் சிவ இளங்கோ அவர்கள் அந்தப்பகுதிகளில் பல இடங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி கொடிகளை ஏற்றி வந்தார்.
அதில் ஒரு நிகழ்வாக திண்டுக்கல் பொன்னகரம் பகுதியில் கொடியேற்ற முயலும்போது காவல்துறையினரால் ஏற்றக்கூடாது என்று தடுக்கப்பட்டார்.
இத்தனைக்கும் அந்தக்கொடி எற்கனவே அந்த இடத்தில் ஏற்றப்பட்டு, அங்கே கால்வாய் அமைக்கும் பணியால் பிடுங்கப்பட்டது. திரும்ப மற்ற கட்சிகளின் கொடி ஏற்றப்பட்டுவிட்டபின், இப்போது மக்கள் நீதி மய்யம் கட்சி கொடி மட்டும் ஏற்ற அனுமதியில்லை என்று தடுக்கப்பட்டது. ஏனைய கொடிகள் இருக்கும்போது எங்கள் கொடியை மட்டும் தடுப்பதேன், நாங்கள் எங்கள் கொடியை ஏற்றியே தீருவோம் என்று கட்சியினர் போராடிய பின்பு அனுமதி அளிக்கப்பட்டு, பின் கொடி ஏற்றப்பட்டது.
சிலநாட்களுக்கு முன் சென்னை சூளை மேட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக 45 அடி உயரத்தில் திமுக தனது பிரமாண்டக்கொடியை ஏற்றியது.
ஆட்சி அதிகாரம் தன் கையிலிருக்கும் தைரியத்தில் தமிழகம் முழுக்க நினைத்த இடத்தில் தங்கள் கொடியை ஏற்றிக்கொள்ளும் திமுக, நியாயமாக மற்ற கொடிகள் பறக்கும் இடத்தில்கூட எங்கள் கொடியை ஏற்ற தடைசெய்வதை வன்மையாக கண்டிக்கிறோம்.
அன்னியர் ஆட்சியில் தேசியக்கொடி ஏற்ற ஆங்கிலேயர்கள் தடை செய்தது போல் ஆளும்கட்சி மற்ற கட்சிகளை கொடி ஏற்ற விடாமல் தடுப்பதை, பயந்து கொண்டிருக்காமல், அன்று போல இன்றும் எதிர்த்து கொடியேற்றுவோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் .
மக்கள் நீதி மய்யம் கட்சி சட்டத்தை எந்த அளவிற்கு மதிக்குமோ,
அந்தளவுக்கு, அதை தவறாக பிரயோகித்தால் தடுக்கவும் தயங்காது என்பதை ஆள்வோர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்."
இவ்வாறு அந்த அறிக்கையில் முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
MNM Condemn to DMK Govt 8122022