செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது..!! - முதல்வர் மு.க ஸ்டாலின் ட்விட்..!! - Seithipunal
Seithipunal


மல்யுத்த போட்டியில் பதக்கங்களை வென்ற ஏழு மல்யுத்த வீராங்கனைகளுக்கு இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷண் சிங் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இதனை கண்டித்து கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனைகள் மூன்று நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து மல்யுத்த வீராங்கனை மேரி கோம் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில் தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவும், பாலியல் புகாருக்கு ஆளாகியுள்ள இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பிரிஜ் பூஷண் சிங்கை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி இன்று ஜந்தர் மந்திரில் இருந்து பேரணியாக சென்றனர்.

இந்த நிலையில் நேற்று புதிய நாடாளுமன்ற கட்டிட பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக பேரணியாகச் சென்ற மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகளை போலீசார் குண்டு கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். போலீசாரின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் "பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. அவர் மீது இதுவரை அக்கட்சியின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து தலைநகரில் போராடி வருகிறார்கள். இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவின்போது, போராட்டம் நடத்திய அவர்களை இழுத்துச் சென்றும் - தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது.

குடியரசுத் தலைவரையே புறந்தள்ளி, அனைத்து எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கும் ஆளாகி நடைபெறும் திறப்புவிழா நாளில் அராஜகமும் அரங்கேறுவதுதான் அறமா?" என கண்டனத்துடன் கேள்வி எழுப்பி உள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mksalin condemns wrestlers arrested in Delhi


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->