மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவின் முயற்சியை தமிழகம் ஒருபோதும் அனுமதிக்காது; அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்..!
Minister Duraimurugan has categorically stated that Tamil Nadu will never allow Karnatakas efforts in the Mekedatu Dam issue
தமிழக அரசு காவிரி டெல்டா விவசாயிகள் நலன்களை பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவின் முயற்சியை தமிழகம் ஒருபோதும் அனுமதிக்காது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;
''காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் ஒரு பெரிய அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்ததை எதிர்த்து, தமிழக அரசு 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும், அதனுடன் தொடர்புடைய பிற வழக்குகளும் 2025 நவம்பர் 13ம் தேதி விசாரணைக்கு வந்தன.
இதில், மேகதாது அணை தமிழகத்திற்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் 2018 பிப்ரவரி 2ம் தேதி வழங்கப்பட்ட உச்ச நீதி மன்ற இறுதி தீர்ப்பு பத்தி 353ல் கூறியபடி, மேகதாது அணை கட்ட முயற்சிப்பது, இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னையை மேலும் பெரிதாக்கும் என்பதையும் குறிப்பிட்டு தமிழகம் வாதிட்டது.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் ஆணை 2025 நவம்பர் 11ம் தேதி வெளி வந்தது. இதில் மேகதாது அணை தொடக்க நிலையில் தான் உள்ளது, இத்திட்டம் உச்சநீதிமன்ற முந்தைய தீர்ப்புக்கு உட்பட்டதா, இல்லையா என்பதை நிபுணர்கள் அடங்கிய மத்திய நீர்வளக்குழுமம் தான் தீர்மானிக்க முடியும் என்றும் கூறியுள்ளது.
இதுகுறித்து தமிழகம் அதன் வாதங்களை மத்திய நீர்வளக் குழுமத்திடம் முன் வைக்கவும் ஆணையிட்டுள்ளது. இந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ள சில கருத்துகள், குறிப்பாக மாநிலங்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நீரை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தாங்களே முடிவு செய்யலாம் என்று தெரிவித்து இருப்பது, 2018 டிசம்பர் 16ம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பின் பத்தி 447ல் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ள நீர், ஆணையில் குறிப்பிட்டுள்ள திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளதற்கு முரணாக உள்ளது.

ஆகையால், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு சார்பாக வாதிடும் மூத்த வக்கீல்களின் ஆலோசனைப்படியும் முதல்வரின் உத்தரவுப்படியும் உச்ச நீதிமன்றத்தில் 2025 நவம்பர் 13ம் தேதி மறு பரிசீலனை செய்ய தமிழக அரசு 2025 டிசம்பர் 12ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது.
மேலும் மத்திய நீர்வளக்குழுமத்திடமும் மேகதாது அணை எவ்வாறு தமிழகத்துக்கு பாதகமாக இருக்கும் என்பதையும், உச்ச நீதிமன்ற ஆணைக்கு முரணாக இருக்கும் என்பதையும் குறிப்பிட்டு ஒரு விரிவான மனுவை 2025 டிசம்பர் 9ம் தேதி அளித்துள்ளது.
இவ்வாறு தமிழக அரசு காவிரி டெல்டா விவசாயிகள் நலன்களை பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. கர்நாடக அசின் முயற்சியை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது.'' என்று அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Minister Duraimurugan has categorically stated that Tamil Nadu will never allow Karnatakas efforts in the Mekedatu Dam issue