'ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது குறித்து 08 வயது முதலே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்'; அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதி..!
Minister Adhav Arjuna assures that several schemes will be formulated to enhance the sports sector in Tamil Nadu
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசும் போது கூறியதாவது;
இதே விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் தங்கிப் பயின்றவன் நான். இங்கு உள்ள உள்கட்டமைப்புகள், விடுதிகளை ஆய்வு செய்து, விடுதிகளில் பயிலும் மாணவர்கள், பயிற்சியாளர்களிடம் கலந்துரையாடி அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்துள்ளோம்.
கடந்த 1994-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் சர்வதேசப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதன் பிறகு பெரிய அளவில் சர்வதேச போட்டிகள் நடைபெறவில்லை. அதற்குத் தேவையான உள்கட்டமைப்புகளும் இல்லை. எனவே, உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதன் மூலம் போதைப் பழக்கத்தில் இருந்து மாணவர்கள் விடுபட முடியும் என்றும், போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை குறையும். இதை கருத்தில் கொண்டு, கல்வித் துறைக்கு இணையாக விளையாட்டுத் துறையை மேம்படுத்த பல திட்டங்களை வகுத்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நமது விளையாட்டு வீரர்கள் அதிகபட்சம் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கவே இலக்கு வைத்துள்ளதாகவும், அவர்களுக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்பது குறித்து அவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், வெளிநாடுகளைப் போல, தமிழகத்திலும் சிறு வயதில் இருந்தே விளையாட்டு வீரர்களை தயார் செய்து, ஊக்குவிக்க உள்ளோம் என்றும், குறிப்பாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது குறித்து 08 வயது முதலே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
English Summary
Minister Adhav Arjuna assures that several schemes will be formulated to enhance the sports sector in Tamil Nadu