கொளத்தூர் தொகுதி பறிப்பு! சேகர்பாபுவுக்கு செக் வைத்த ஸ்டாலின்? டித்து ஆடிய திமுக தலைமை!
Kolathur constituency snatched away Did Stalin checkmate Sekar Babu DMK leadership plays a strategic move
சட்டசபைத் தேர்தலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்தத் தொகுதியின் கட்சி நிர்வாகப் பொறுப்பு அமைச்சர் சேகர்பாபுவிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை மாநகரில் திமுக அமைப்பு ரீதியாக 10 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரான சேகர்பாபுவின் கட்டுப்பாட்டில் தற்போது 3 தொகுதிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.
சட்டசபைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின், தவெக வேட்பாளர் விஎஸ் பாபுவிடம் சுமார் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். திமுகவுக்கு ஏற்பட்ட தோல்வியைக் காட்டிலும், அக்கட்சியின் தலைவராக இருந்த ஸ்டாலின் தனது சொந்த தொகுதியிலேயே தோல்வியடைந்தது திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இருப்பினும், தேர்தல் முடிவுக்கு மறுநாளே கொளத்தூர் தொகுதிக்கு சென்ற ஸ்டாலின், தனக்கு வாக்களித்த மக்களுக்கும், தேர்தலில் பணியாற்றிய கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்தார். அப்போது அவருடன் இருந்த சேகர்பாபு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் சோகத்தில் இருந்ததாகவும், சில தொண்டர்கள் கண்ணீர் சிந்தியதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து திமுகவில் அமைப்பு ரீதியான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. கட்சியின் நிர்வாக வசதி மற்றும் களப்பணியை கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் திமுக அமைப்பு மாவட்டங்களின் எண்ணிக்கையை 77-ல் இருந்து 110 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சென்னை மாநகரம் மட்டும் 10 உட்கட்சி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த மறுசீரமைப்பில்தான் சேகர்பாபுவின் கட்டுப்பாட்டில் இருந்த கொளத்தூர் தொகுதி அவரிடமிருந்து விலகியுள்ளது. இதற்கு முன்பு சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்த சேகர்பாபுவின் கட்டுப்பாட்டில் துறைமுகம், திரு.வி.க.நகர், வில்லிவாக்கம், பெரம்பூர், கொளத்தூர் மற்றும் எழும்பூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.
தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட சேகர்பாபு மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வியடைந்தார். இதன் பின்னணியிலேயே கொளத்தூர் தொகுதி சேகர்பாபுவின் மாவட்டக் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
புதிய மறுசீரமைப்பின்படி, சேகர்பாபுவின் சென்னை கிழக்கு மாவட்டத்தில் தற்போது துறைமுகம், திரு.வி.க.நகர் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய 3 தொகுதிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. மறுபுறம் பெரம்பூர் மற்றும் கொளத்தூர் ஆகிய இரு தொகுதிகளும் ஒரே புதிய மாவட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதனால், தற்போது அரசியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ள பெரம்பூர் தொகுதியையும், திமுக தலைவர் ஸ்டாலின் தோல்வியடைந்த கொளத்தூர் தொகுதியையும் எந்த மாவட்டச் செயலாளரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு திமுகவுக்குள் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, கட்சியின் தலைவர் போட்டியிட்ட தொகுதியிலேயே ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட இந்த மாவட்ட மறுசீரமைப்பு, சேகர்பாபுவின் அரசியல் அதிகாரத்தை குறைக்கும் நடவடிக்கையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் திமுகவின் சென்னை மாவட்ட அரசியலில் அடுத்தடுத்து என்ன மாற்றங்கள் நிகழும் என்பதையே கட்சி நிர்வாகிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
English Summary
Kolathur constituency snatched away Did Stalin checkmate Sekar Babu DMK leadership plays a strategic move