கரூர் சம்பவம்: தரமான பண்புள்ள அரசியல்வாதியின் தலைமை எப்படி செயல்படுத்தணுமோ அதனை முதல்வர் செய்துள்ளார்: கமல்ஹாசன் புகழாரம்..!
Kamal Haasan praises the Chief Minister for implementing the leadership of a quality politician in the Karur incident
கரூர் துயர சம்பவத்தில் நடிகர் விஜய்க்கு நீதிமன்றம் அறிவுரை கூறும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். கரூர் வேலுச்சாமிபுரத்தில், நடிகர் விஜய்யின் பிரசாரக்கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது. இந்நிலையில் சம்பவ இடத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவரும் எம்பியுமான கமல்ஹாசன் ஆய்வு செய்துள்ளார்.
பின்னர் பலியான ஒன்றரை வயது குழந்தையின் வீட்டுக்குச் சென்ற அவர், பெற்றோருக்கு ஆறுதல் கூறியுள்ளதோடு, கமல் பண்பாட்டு மையம் சார்பில் வழங்கப்பட்ட ரூ.1 லட்சத்துக்கான காசோலையை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுங்கு வழங்கியுள்ளார். இதனையடுத்து, நிருபர்களிடம் பேசிய கமல்ஹாசன் கூறியதாவது;
இப்போது நான் வந்திருப்பது துக்கம் விசாரிக்க.. இப்போது குறைகள் கூறுவதற்கோக, நிறைகள் கூறுவதற்கோ நேரம் இல்லை. ஏன் என்றால் இப்போது இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது, அதிகம் பேசக்கூடாது. எல்லாரும் நிறைய பேசிவிட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இங்கே நாங்கள் வந்தது..இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், ஆறுதல் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக தான் என்று தெரிவித்துள்ளதோடு, 'உங்களிடம் ஒரு சின்ன வேண்டுகோள். இவர்களை நிம்மதியாக இருக்க விடுங்க. இவர்கள் பட்டுட்டாங்க பாடு' என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், கேள்விகள் கேட்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன வழி பண்ண வேண்டும், இதுபோல் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், இது யாரையும் பாராட்டும் நேரம் அல்ல.. அந்த பாலத்தில் அனுமதி கொடுக்காததற்கு நன்றிதான் சொல்லணும். இவர்கள் ஏன் இங்கு வந்தார்கள் என்று கேட்பதைவிட வந்தார்களே என்பது தான் எனக்கு ஆறுதல் என்று தெரிவித்துள்ளார்.

இவர்கள் நேரத்துக்கு வரவில்லை என்றால் இன்னும் நான்கைந்து பேர் உயிரிழப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதற்கு நன்றி தான் சொல்லணும். பாராட்டு விழா நடத்த நேரம் இல்லை. செய்யவில்லை என்று சொல்வதற்கு நேரம் இல்லை, இது நடந்துவிட்டது. நீதிமன்றம் விசாரித்துக் கொண்டு இருக்கிறது என்று பேசியுள்ளார்.
மேலும், ஒரு தரமான பண்புள்ள அரசியல்வாதி அதை எப்படி நடத்தணுமோ, தலைமை எப்படி செயல்படுத்தணுமோ அதற்கான எல்லா குணாதிசயத்தையும் முதல்வர் காட்டியுள்ளார். அது பெருமையாகவுள்ளது, அதற்கு நன்றியும் சொல்ல வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு குறைபாடு என்று யார் குற்றச்சாட்டு வைக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். என்ன நடந்தது என்று எல்லாருக்கும் தெரியும் என்று பேசிய நேரத்தில் நிருபர் குறுக்கிட்டு, விஜய்க்கு என்ன அறிவுரை சொல்ல இருக்கிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு, 'அது நீதிமன்றத்தில் சொல்வார்கள்' என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
English Summary
Kamal Haasan praises the Chief Minister for implementing the leadership of a quality politician in the Karur incident