அதிமுக 200 தொகுதிகளில் வெற்றிபெறும்.. வெளியான கணிப்பு.!!
kadambur raju press meet on jan 04
கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் முக அழகிரி பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், மதுரையில் முக அழகிரி முழுக்க முழுக்க ஸ்டாலினைப் பற்றி தான் பேசினார். அதற்கு மு க ஸ்டாலின் தான் பதில் சொல்ல வேண்டும். அதில் நாங்கள் எந்த கருத்தும் கூற முடியாது.
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின்னர் கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அதிமுக தலைமை முடிவு செய்யும். ஆட்சிக்கு வர முடியாத கட்சிகளும், லெட்டர்பேடு கட்சிகளும் நாங்கள் ஆதரவு கொடுத்தால் தான் ஆட்சிக்கு வரமுடியும் என கூறி வருகிறார்கள். அது அவர்களின் உரிமை. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் அனைத்தும் தற்போது வரை கூட்டணி தொடர்கிறது.
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். திரைத்துறையினரின் பல்வேறு கோரிக்கைகளை இந்த அரசு நிறைவேற்றி உள்ளது. கொரோனா காலகட்டத்தில் திரைத்துறையினர் வைத்த கோரிக்கைகளை ஏற்று பல்வேறு தளர்வுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரபல நடிகர்களின் படம் வெளியாகிறது.
100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்கு திறக்க அனுமதிக்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 100% இருக்கைகளுடன் திரையரங்குகளை இயக்க அனுமதி அளித்துள்ளார் என கூறினார்.
English Summary
kadambur raju press meet on jan 04