எத்தனை பாலியல் வன்கொடுமைகள்..? தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து தவெக அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்..!
Jawahirullah condemns the TVK government over the law and order situation in Tamil Nadu
'நேற்று ஒரே நாளில் மட்டும் சென்னை, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், தாம்பரம், பூவிருந்தவல்லி உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்றுள்ள கொடூரச் சம்பவங்கள், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து மிகுந்த கவலைக்குரிய கேள்விகளை எழுப்புகின்றன'' என்று மமக தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா தவெக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது;
''தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து வெளிவரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் ஒட்டுமொத்த சமூகத்தையும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளன.

நேற்று ஒரே நாளில் மட்டும் சென்னை, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், தாம்பரம், பூவிருந்தவல்லி உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்றுள்ள கொடூரச் சம்பவங்கள், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து மிகுந்த கவலைக்குரிய கேள்விகளை எழுப்புகின்றன. “தமிழ்நாட்டில் இன்று எத்தனை பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுள்ளன?” என்று மக்கள் வேதனையுடனும் பதற்றத்துடனும் கேட்கும் சூழல் உருவாகியுள்ளது.
வளர்ச்சி, முதலீடு, தொழில்நுட்ப முன்னேற்றம் என பெருமையாகப் பேசப்படும் தமிழகத்தில், பெண்களும் பெண் குழந்தைகளும் பாதுகாப்பற்ற சூழலில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது எந்த அரசுக்கும் முதன்மை பொறுப்பாகும். “சிங்கப்பெண்” போன்ற திட்டங்களை அரசு மிகுந்த விளம்பரத்துடன் அறிவித்திருந்தாலும், பெண்களும் குழந்தைகளும் அச்சமின்றி வாழும் சூழல் புதிய ஆட்சியில் உருவாகாதது கவலைக்குரியது.

குற்றங்கள் நடந்த பின் நடவடிக்கை எடுப்பதை விட, அவை நடைபெறாத சூழலை உருவாக்குவதே அரசின் உண்மையான கடமையாகும். பள்ளிகள், பொது இடங்கள், போக்குவரத்து மையங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பை பலப்படுத்துவதுடன், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
ஒரு நாகரிகமான சமூகத்தின் உண்மையான அளவுகோல் அதன் பெண்களும் குழந்தைகளும் எவ்வளவு பாதுகாப்பாக வாழ்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது. அந்த அடிப்படை பொறுப்பை நிறைவேற்றுவதில் அரசு தோல்வியடையக் கூடாது. பெண்கள் அச்சமின்றி வாழவும், குழந்தைகள் பாதுகாப்பாக வளரவும் முடியாத சூழல் நீடித்தால், அது எந்த அரசுக்கும் பெருமை அல்ல; அந்த அரசின் மிகப்பெரிய தோல்வியாகவே வரலாறு பதிவு செய்யும்'' என்று மமக தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Jawahirullah condemns the TVK government over the law and order situation in Tamil Nadu