தவெகவில் உட்கட்சி மோதல்! ஆதவ் அர்ஜுனா பேசியது பெரிய சிக்கலாகிடுச்சு.. ஜான் அனுப்பிய புகார்.. கடும் அதிருப்தியில் விஜய்!
Internal conflict in Thaveka Adhav Arjuna speech has become a big problem John sent a complaint Vijay is very unhappy
தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) உட்கட்சி மோதல் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு, கட்சியின் முக்கிய நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா மற்றும் ஜான் ஆரோக்கியசாமி இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற தவெக பொதுக்குழு கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய், முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார்.
அவர் உரையில்,“மக்களுக்கு அரசு மீது நம்பிக்கை இழந்துவிட்டது. ஸ்டாலின் சட்டசபையில் சொன்னது அனைத்தும் வடிகட்டிய பொய்,”
என தெரிவித்துள்ளார்.
விஜய்யின் பேச்சு அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிரொலியை ஏற்படுத்திய நிலையில், அதன் பிறகு பேசிய ஆதவ் அர்ஜுனாவின் உரை தவெக உள்ளே சர்ச்சையை கிளப்பியது.
பொதுக்குழுவில் ஆதவ் அர்ஜுனா,“ஜெயலலிதா ஆட்சியில் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது ஸ்டாலின் பெங்களூரில் இருந்தார். செந்தில் பாலாஜி கரூர் விவகாரம் குறித்து யார் ரவுடி என்பதை மக்கள் பார்க்கட்டும்,”
என்று கூறியதுடன், பல்வேறு அரசியல் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.
இந்த உரை தேவையற்ற சர்ச்சையை உருவாக்கியதோடு, சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனம் எழுப்பினர்.
முக்கியமாக தவெக நிர்வாகிகளே, ஆதவ் அர்ஜுனா பேசும் விதம் கட்சிக்கே பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக குற்றஞ்சாட்டினர்.
இந்த விவகாரத்தை ஜான் ஆரோக்கியசாமி நேரடியாக விஜய்யிடம் எடுத்துச் சென்றுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் விஜயிடம்,“ஆதவ் அர்ஜுனா உங்களை விட அதிக நேரம் பேசியுள்ளார். கரூர் சம்பவத்திற்குப் பிறகு நடந்த முக்கிய பொதுக்குழுவில் தேவையற்ற விவாதங்களை கிளப்பியுள்ளார். அவரது பேச்சு ஆளும் தரப்பையும், பொதுமக்களையும் கடுப்பாக்கியுள்ளது,”
என்று புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
மேலும்,“உங்கள் பேச்சு கவனிக்கப்பட வேண்டிய நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் சர்ச்சைமிக்க உரையே முக்கியமாக பேசப்படுகிறது,”
என்றும் ஜான் ஆரோக்கியசாமி தெரிவித்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.
இந்த தகவல்கள் விஜய்யின் காதில் விழுந்ததும், அவர் ஆதவ் அர்ஜுனா மீது கடும் அதிருப்தி அடைந்ததாக கட்சிவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.முதன்மை கூட்டத்தில் தன்னுடைய பேச்சை மிஞ்சி மற்றொருவரின் சர்ச்சை ஊடகங்களில் வெளிவந்தது, தலைவரை விரக்தியடையச் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கட்சிக்குள் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தவெக நிர்வாகம் இதுகுறித்து அமைதியாக இருந்தாலும், உள்மூலங்களில் பதற்றம் நிலவுகிறது.
தவெக தற்போது தேர்தல் முன்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சூழலில், இவ்வாறான உள்கட்சி மோதல்கள் கட்சியின் ஒற்றுமைக்கும், வெளிப்படையான அரசியல் தோற்றத்துக்கும் சவாலாக மாறும் அபாயம் நிலவுகிறது.
கட்சியின் தலைவராக விஜய், இந்த நிலைமையை எவ்வாறு சமாளிக்கிறார் என்பதே, தவெகின் அடுத்தகட்ட அரசியல் பயணத்தை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது.
English Summary
Internal conflict in Thaveka Adhav Arjuna speech has become a big problem John sent a complaint Vijay is very unhappy