நற்செய்தி! சாதி மறுப்பு திருமணம் குறித்து முதலமைச்சருக்கு வேண்டுகோள்! - எம்.பி ரவிக்குமார்
Good news Request Chief Minister regarding intercaste marriage MP Ravikumar
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ரவிகுமார் எம்.பி.,அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறுத்தி வைத்த, சாதி மறுப்புத் திருமணம் செய்தோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கும் அரசாணையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளதாவது,"தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் அரசுப் பணிக்கு நியமனம் செய்யும்போது முன்னுரிமை தரப்பட வேண்டியவர்களின் பட்டியலில் சாதி மறுப்பு கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களையும் சேர்த்துத் தமிழக அரசு 1986 ஆம் ஆண்டில் ஆணையிட்டது.
2006 முதல் 2011 வரை முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியின் போது தமிழக அரசின் இடைநிலை ஆசிரியர் பணி நியமனங்களில் சாதி மறுப்புக் கலப்புத் திருமணம் செய்துகொண்ட 287 பேர் பணி நியமனம் பெற்றனர். ஆனால் அதன் பிறகு அமைந்த அதிமுக ஆட்சியில் சாதி மறுப்புக் கலப்புத் திருமணம் செய்து கொண்ட எவரும் அரசுப் பணியில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யப்படவில்லை.
திரு எம்ஜிஆர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தை அவரது வாரிசாகக் கூறிக்கொள்ளும் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் வலியுறுத்தியும் அவர் செயல்படுத்தவில்லை.திமுக அரசு அமைந்ததும் இதை சுட்டிக்காட்டி மாண்புமிகு முதலமைச்சர் மு.க,.ஸ்டாலின் அவர்களுக்கும் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பினேன்.சமூகநீதி காக்கும் திமுக அரசிலும் அந்த அரசாணை இதுவரை நடைமுறைக்கு வராத நிலையே உள்ளது.
வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதில்லை என்பதால் இதை செயல்படுத்த முடியவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அது ஏற்கத்தக்க காரணம் அல்ல. சனாதனக் கருத்தியல் செல்வாக்கால் தமிழ்நாட்டில் சாதிய காழ்ப்பு அதிகரித்துவரும் சூழலில் சமத்துவத்தை நோக்கிய இத்தகைய சிறிய முன்னெடுப்புகளையும்கூடப் புறக்கணிப்பது சமூகநீதிக்கு ஊறு விளைவிக்கும்.தேர்தலுக்கு முன்பாக இந்த அரசாணையை மீண்டும் செயல்படுத்திட உரிய வழிகாட்டுதலை அதிகாரிகளுக்கு வழங்குமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வேண்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Good news Request Chief Minister regarding intercaste marriage MP Ravikumar