தீர்த்தவாரி திருவிழாவில் கியாஸ் சிலிண்டர் வெடிப்பு: பெண் உயிரிழப்பு - முதல்வர் ரூ.3 லட்சம் நிவாரணம்!
Gas cylinder explosion Theerthavari festival Woman dies Chief Minister announces 3 lakh relief
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டத்திற்குட்பட்ட மணலூர்பேட்டை கிராமத்தில், தென்பெண்ணை ஆற்றங்கரையில் நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில் நடைபெற்ற தீர்த்தவாரி திருவிழாவின்போது ஏற்பட்ட கொடூர விபத்து குறித்து தாம் மிகுந்த அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பலூன்களை நிரப்ப பயன்படுத்தப்பட்ட கியாஸ் சிலிண்டர் எதிர்பாராத விதமாக வெடித்ததில், திருவண்ணாமலை மாவட்டம் வெங்காயவேலூர், இனாம்காரியந்தல் கிராமத்தைச் சேர்ந்த கலா (55) என்ற பரமசிவத்தின் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தி உள்ளத்தை உலுக்கியதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்தில் காயமடைந்த 18 பேர் தற்போது திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும் தெரிவித்த முதல்வர், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம்,பலத்த காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம்,லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் என முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
English Summary
Gas cylinder explosion Theerthavari festival Woman dies Chief Minister announces 3 lakh relief