தமிழக முதலமைச்சர் விஜயை சந்தித்த ஃபோர்ட் (Ford) உயர்மட்டக் குழு...! தொழில்துறையில் அடுத்த அதிரடி...!
Ford high level delegation meets Tamil Nadu Chief Minister Vijay Next move industry
தமிழகத்தில் தனது தொழில் நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், அமெரிக்காவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான போர்டு மோட்டார் நிறுவனம் முக்கிய முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, போர்டு நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகக் குழு இன்று (20.07.2026) தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்து, எதிர்கால முதலீடுகள் மற்றும் உற்பத்தி விரிவாக்கத் திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தியது.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, அமெரிக்காவைச் சேர்ந்த போர்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் மேத்யூ கோட்லெவ்ஸ்கி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர், முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டில் மீண்டும் வாகன உற்பத்தி நடவடிக்கைகளை தொடங்குவது, உலகளாவிய திறன் மையங்களின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவது மற்றும் வருங்கால முதலீட்டுத் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதித்தனர்.
போர்டு நிறுவனம் ஏற்கனவே சென்னையில் உலகத் தரத்திலான உலகளாவிய திறன் மையத்தை வெற்றிகரமாக இயக்கி வருகிறது. இந்த மையத்தின் மூலம் சுமார் 12 ஆயிரம் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அண்மையில் கோயம்புத்தூரிலும் புதிய உலகளாவிய திறன் மையம் அமைக்கப்பட்டு, அதன் செயல்பாடுகளும் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும், மறைமலைநகரில் உள்ள போர்டு நிறுவனத்தின் உற்பத்தி வளாகத்தில் ரூ.3,250 கோடி முதலீட்டில் இன்ஜின் உற்பத்தி திட்டத்தை தொடங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் நேரடியாக சுமார் 600 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சந்திப்பின் போது, போர்டு நிறுவனத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வரும் தொழில் உறவை முதல்-அமைச்சர் விஜய் நினைவுகூர்ந்தார். தமிழ்நாட்டில் மீண்டும் தொடங்கப்படவுள்ள உற்பத்தித் திட்டங்கள் மற்றும் புதிய முதலீடுகள் அனைத்திற்கும் மாநில அரசு முழுமையான ஒத்துழைப்பையும் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கும் என்று அவர் உறுதியளித்தார்.
அதேபோல், மறைமலைநகர் உற்பத்தி வளாகத்தின் முழுத் திறனையும் பயன்படுத்தும் வகையில், போர்டு நிறுவனம் தனது வாகன உற்பத்தி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கி, எதிர்கால விரிவாக்கத் திட்டங்களையும் தமிழ்நாட்டிலேயே செயல்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் கேட்டுக் கொண்டதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில், தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ச. விஜயகுமார், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும் தலைமைச் செயல் அலுவலருமான தீபக் ஜேக்கப், போர்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சிமோனெட்டா வெர்டி, போர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு இயக்குநர் தீரஜ் தீக்ஷித், நாட்டின் இயக்குநர் முனைவர் ஸ்ரீபாத் பட் மற்றும் இயக்குநர் வி. ராஜா விமல குமார் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
English Summary
Ford high level delegation meets Tamil Nadu Chief Minister Vijay Next move industry