'தொகுதிப்பங்கீடு தொடர்பாக ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள் தவறானவை'; டிடிவி தினகரன் விளக்கம்..!
DTV Dhinakaran clarified that the news reports appearing in the media regarding seat sharing are false
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், மத்திய அமைச்சரும் , தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலை சந்தித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைந்துள்ளர்.
அதிமுக பொது செயலாளர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிசாமியை டி.டி.வி.தினகரன் சந்தித்து கூட்டணியில் இணையாமல், மத்திய அமைச்சர்பியூஷ் கோயலை சந்தித்து இணைந்திருப்பது தமிழக அரசியலில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. முன்னதாக, அ.தி.மு.க. இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்கமாட்டோம் என்று கூறியதோடு, டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிசாமியை துரோகி என்றே கடுமையாக விமர்சித்தார்.
ஆனால், பா.ஜ.க. மேலிட தலைவர்கள் அவரை தொடர்பு கொண்டு மீண்டும் பேசியதாக கூறப்படுகிறது. அதனால், இன்றைக்கு தேசிய ஜனநாயக கூட்டணியிலும் அவர் இணைந்துள்ளார்.

இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிப்பங்கீடு தொடர்பாக வெளியாகி வரும் செய்திகள் தவறானவை மற்றும் ஆதாரப்பூர்வமற்றவை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
''தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் இதய தெய்வம் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் நல்லாட்சியை மீண்டும் தமிழகத்தில் ஏற்படுத்திடும் நோக்கத்தில் அக்கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இன்று இணைந்துள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அங்கம் வகிக்கும் என்ற முடிவு மட்டுமே எடுக்கப்பட்டுள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு குறித்த எந்த பேச்சுவார்த்தையும் இதுவரை நடைபெறவில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம்.
தொகுதிப்பங்கீடு தொடர்பாக பல்வேறு ஊடகங்களில் வெளியாகி வரும் செய்திகள் தவறானவை மற்றும் ஆதாரப்பூர்வமற்றது என்பதை இந்நேரத்தில் தெளிவுபடுத்திக் கொள்வதோடு, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் வரை இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்'' என்று அதில் கூறப்பட்டுள்ளது.
English Summary
DTV Dhinakaran clarified that the news reports appearing in the media regarding seat sharing are false