தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி? – 2-வது இடம் யாருக்கு? தேர்தலுக்கு முன் வெளியான புதிய கருத்துக்கணிப்பு!
DMK rule again in Tamil Nadu Who will be in 2nd place New poll released before the election
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு நடத்தப்பட்டுள்ள கருத்துக்கணிப்பில், திமுக தலைமையிலான கூட்டணியே மீண்டும் ஆட்சியை அமைக்கும் வாய்ப்பு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பை ஐதராபாத்தைச் சேர்ந்த அரசியல் நுண்ணறிவு மற்றும் தேர்தல் கணிப்பு நிறுவனமான ‘கேகே சர்வேஸ் அண்ட் ஸ்ட்ரேட்டஜிஸ்’ நிறுவனத்தின் பாராவீல் பிரிவு மேற்கொண்டுள்ளது.
இந்த ஆய்வு தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி அளவில் விரிவாக நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மொத்தம் 70 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களிடம் இந்த கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஒரு தொகுதிக்கு குறைந்தபட்சம் 30 ஆயிரம் வாக்காளர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு முடிவுகளின்படி:
-
திமுக கூட்டணி – 41.5% வாக்குகள்
-
அதிமுக - பாஜக கூட்டணி – 36.2% வாக்குகள்
-
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் – 13.6% வாக்குகள்
-
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி – 7.9% வாக்குகள் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த கணிப்பின் படி, தமிழகத்தில் மூன்றாவது பெரிய அரசியல் சக்தியாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக சென்னை நகரில் உள்ள பல தொகுதிகளில், திமுகவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை விஜய் கட்சி பிடிக்கும் என்றும், அதிமுக - பாஜக கூட்டணியை பின்னுக்கு தள்ளும் நிலை உருவாகலாம் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
மேலும் இளைஞர்கள் மற்றும் முதல் முறையாக வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் மத்தியில் விஜய் கட்சிக்கு குறிப்பிடத்தக்க ஆதரவு இருப்பதாகவும் கருத்துக்கணிப்பு கூறுகிறது.
தமிழகத்தில் இந்த முறை நான்கு முனை போட்டி நிலவும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. திமுக கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்தனி சக்திகளாக களத்தில் உள்ளன.
இதற்கிடையில், விஜய் தனது கட்சி ஆட்சியை அமைக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகிறார். மறுபுறம் திமுக “திராவிட மாடல் 2.0” தொடரும் என வலியுறுத்தி வருகிறது. அதே சமயம் அதிமுக - பாஜக கூட்டணியும் ஆட்சியை பிடிப்போம் என்ற நம்பிக்கையுடன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
குறிப்பாக இந்த கருத்துக்கணிப்பை நடத்திய நிறுவனம், கடந்த 2019 மற்றும் 2024 ஆந்திரா சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் 2024 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை துல்லியமாக கணித்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த கருத்துக்கணிப்பும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
English Summary
DMK rule again in Tamil Nadu Who will be in 2nd place New poll released before the election