'செயலில் காட்டுவோம்'... மீனவர்கள் கைது விவகாரத்தில் மத்திய மந்திரியுடன் பேச முடிவு...! - டெல்லி புறப்படும் அமைச்சர் ஸ்ரீநாத்...!
Decision talk Union Minister issue fishermen arrest Minister Srinath leaving Delhi
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்கள் அவரிடம், இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் உள்ளிட்ட தமிழக பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர்.
குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இந்த தொடர் கைதுகளுக்கு கண்டனம் தெரிவித்திருப்பதுடன், மீனவர்கள் விவகாரத்தில் தமிழக அரசு உணர்வுப்பூர்வமாக மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்றும் கேள்வி எழுப்பியிருப்பது குறித்து அமைச்சரிடம் கேட்கப்பட்டது.
இதற்கு அமைச்சர் ஸ்ரீநாத் பதிலளிக்கையில், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
“நான் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை டெல்லி செல்கிறேன். அங்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை நேரில் சந்தித்து, தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன். இந்த சந்திப்பின் மூலம் மீனவர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் நல்ல முடிவை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் கூறினார்.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம், பாதுகாப்பு மற்றும் எதிர்கால நலன் கருதி அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.மேலும், “மீனவர்கள் பிரச்சினையில் த.வெ.க. அரசு எடுக்கப்போகும் உணர்வுப்பூர்வமான நடவடிக்கை என்ன என்பதை வெறும் வார்த்தைகளாக கூறாமல், செயல்பாட்டின் மூலம் வெளிப்படுத்துவோம்” என்று அமைச்சர் ஸ்ரீநாத் உறுதியளித்தார்.
தொடர்ந்து நடைபெறும் பேச்சுவார்த்தைகள் மூலம் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் விவகாரத்துக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா என்ற எதிர்பார்ப்பு மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
English Summary
Decision talk Union Minister issue fishermen arrest Minister Srinath leaving Delhi