அதிமுக-பாஜக கூட்டணி முறியவில்லை! கொளுத்தி போடும் I.N.D.I.A கூட்டணி கட்சி!
CPI Mutharasan opinion AIADMK BJP alliance not ended
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுகவையும், அதிமுக தலைவர்களையும் தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வந்த நிலையில் அதற்கு அதிமுக தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. உச்சபட்சமாக மறைந்த அதிமுக தலைவர்களான ஜெயலலிதா மற்றும் அண்ணாதுரை குறித்து அண்ணாமலை தொடர்ந்து அவதூறாக பேசி வந்தார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அதிமுக தலைமை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி தேசிய தலைமைக்கு அனுப்பியது. ஆனால் அதன் மீது பாஜக தேசிய தலைமை உரிய நடவடிக்கை எடுக்காததால் அதிமுக தலைமை பாஜக தேசிய தலைமையின் மீது அதிருப்தியில் இருந்தது.

இந்த நிலையில் கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என அறிவித்ததோடு இது அதிமுகவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு என தெளிவுபடுத்தியிருந்தார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் திடீரென அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவை டெல்லியில் சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இதனால் அதிமுக பாஜக கூட்டணி நிலைக்குமா? அல்லது முடியுமா? என்ற குழப்பம் அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியது. இந்த நிலையில் தான் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இன்று மாலை 3:45 மணி அளவில் தொடங்கியது. அவசரமாக கூட்டப்பட்ட இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக விலகுவதாக கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே.பி முனுசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை அக்கட்சியின் தொண்டர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இந்த கூட்டணி முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன் "அதிமுக பாஜக கூட்டணி முறியவில்லை, வளைந்துள்ளது. இந்த விவகாரம் பின்னால் ஒரு சதிப்பின்னல் இருக்கிறது. அது போக போக தான் தெரிய வரும். அமித் ஷாவை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசியதாக செய்தி வந்தது, ஆனால் என்ன பேசினார்கள் என்பது வெளியே வரவில்லை. அதேபோன்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவை சந்தித்தது குறித்தான அதிகாரப்பூர்வ செய்தி கூட வெளியாகவில்லை.
வாஜ்பாய் உடன் இணைந்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்ற ஜெயலலிதா ஒரு வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக ஆட்சியை கலைத்ததோடு இனி பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அறிவித்தார். அவ்வாறு இருக்கையில் இவர்கள் மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைத்தனர். ஜெயலலிதா நிராகரித்த கட்சியோடு அதிமுக மீண்டும் கூட்டணி அமைத்தது? எனவே இது கூட்டணி முறிவு அல்ல, வளைவு மட்டும் தான். இன்னும் தேர்தல் நடைபெற ஐந்தாறு மாதங்கள் உள்ளதால் தேர்தல் நெருக்கத்தில் இதன் முடிவு தெளிவாக தெரிய வரும்" என முத்தரசன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
English Summary
CPI Mutharasan opinion AIADMK BJP alliance not ended