தாயை அவமதித்து விட்டோமா? அவமதிப்பின் உச்சகட்டம்... பிரதமருக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!
Congress Selvaperunthagai condemn to PM Modi
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விடுத்துள்ள அறிக்கையில், " காங்கிரஸ் கட்சியும் ராஷ்டிரிய ஜனதா தளமும் தனது தாயை அவமதித்து விட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பது, யாரும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் மட்டுமல்ல - அவமதிப்பின் உச்சகட்டம். பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாய்மையை அரசியல் குற்றச்சாட்டுக்குள் இழுத்து வரும் அளவுக்கு மோடி அரசியலில் தரம்தாழ்ந்து வீழ்ச்சியடைந்துவிட்டார்.
அவருடைய அவதூறு குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை. மோடியின் செயல் முழுமையாக அவரது அரசியல் முகமூடியை கிழித்தெறிந்துவிட்டது. உண்மையான அரசியல்வாதி மக்களின் பிரச்சினைகளுக்கு விடை அளிப்பார். ஆனால் மோடி பொய்யும் அவதூறும் மூலமாக தன் தோல்வியை மறைக்க முயல்கிறார்.
மக்கள் தலைவர் திரு ராகுல் காந்தி அவர்கள் மற்றும் திரு தேஜஸ்வி யாதவ் அவர்கள் மக்கள் நலனுக்காகக் குரல் கொடுக்கிறார்கள். அதை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளத் துணிவு இல்லாததால்தான் மோடி தனிப்பட்ட குடும்பத்தை குறிவைத்து தாக்குகிறார்.
பத்து ஆண்டுகளாக ஆட்சி செய்தும் மக்களுக்கு துளியும் வளர்ச்சியும், முன்னேற்றமும் தர முடியாதவர், இன்று தன் பலவீனத்தை மறைக்க இழிந்த குற்றச்சாட்டுகளையே ஆயுதமாகப் பயன்படுத்துகிறார். மக்களின் கண்முன்னே உண்மை வெளிச்சமாகி விட்டது — மோடியின் முகமூடி கிழிந்துவிட்டது. இனி இந்த நாட்டில் பொய் அரசியலை மக்கள் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.
English Summary
Congress Selvaperunthagai condemn to PM Modi