இந்தியாவின் தூய்மையற்ற நகரங்கள் பட்டியலில் மதுரை... தமிழக அரசை மட்டும் குறை கூற முடியாது - கார்த்தி சிதம்பரம்!
Congress karthi chidambaram madurai dirty city in in india no 1
சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், “பாஜகவுடன் கூட்டணி வைத்தது முதல் அதிமுக தொடர்ந்து சரிவில் தள்ளப்படுகிறது” என்று கூறியுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தேர்தலை முன்னிட்டு பொய்யான கூற்றை முன்வைத்துள்ளார். பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வருகிறார்கள். அவர்கள் இல்லாமல் தமிழகத்தில் பல துறைகள் இயங்க முடியாது என்பது உண்மை. இங்கு அவர்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை; அதனால் தான் உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் போன்ற இடங்களில் இருந்து தமிழகத்திற்கு வருகிறார்கள்,” என்றார்.
அவர் மேலும், “இந்தியாவின் தூய்மையற்ற நகரங்கள் பட்டியலில் மதுரை முதலிடத்தில் இருப்பது வருத்தம் தருகிறது. ‘ஸ்வச்ச் பாரத்’ திட்டத்தின் கீழ், டாப் 50 தூய்மையான நகரங்களில் தமிழக நகரங்கள் எதுவும் இல்லை. இது மக்களின் பொது இடங்களுக்கான மரியாதையின்மையை காட்டுகிறது; இதற்கு அரசை மட்டும் குறை கூற முடியாது,” எனவும் தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து, “சரிபார்ப்பது தவறில்லை. ஆனால் வாக்களித்தவர்களை நீக்குவது, அல்லது விசாரணையின்றி பெயர்கள் சேர்ப்பது தவறு. எந்த பெயரையும் நீக்கினாலும் உரிய நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும். தமிழகத்திற்கு வேலைக்காக வரும் வெளிமாநில தொழிலாளர்களை வாக்காளர்களாக சேர்ப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது,” எனவும் கூறினார்.
மேலும், “செங்கோட்டையன் அதிமுகவின் மூத்த தலைவராக அனைத்து சோதனைகளையும் வெற்றிகளையும் கண்டவர். அவரை நீக்கியது வேதனையளிக்கிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்தது முதல் அதிமுக கீழ்நோக்கி செல்கிறது,” என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
English Summary
Congress karthi chidambaram madurai dirty city in in india no 1