முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து அவதூறான மற்றும் இழிவாகப் பேசிய நயினார் நாகேந்திரன் மீது டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார்..!
Complaint filed at DGPs office against Nainar Nagendran for speaking disparagingly about CM Vijay
முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மீது காவல்துறை தலைமை இயக்குனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
'அப்பாவை காணோம்' என்ற முதலமைச்சர் பேச்சுக்கு எதிர்வினையாக அவர் அநாகரிகமாக பேசியதாக கண்டனங்கள் எழுந்துள்ளன. இதற்கு அமைச்சர்கள் உள்ளிட்டோர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நயினார் நாகேந்திரனின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் ராஜ்மோகன், அரசியல் தலைவர்கள் நாகரிகமாக பேச வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், தனது அநாகரிகமான பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் மன்னிப்புக் கேட்க வேண்டுமென அமைச்சரும் விசிக துணைப் பொதுச்செயலாளருமான வன்னி அரசு தனது எக்ஸ் தளத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
முதலமைச்சர் விஜய் குறித்த தரம் தாழ்ந்த பேச்சை நயினார் நாகேந்திரன் திரும்பப் பெற வேண்டும் என அமைச்சர் வினோத் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;
''மாண்புமிகு முதலமைச்சர் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் தரம் தாழ்ந்து, அநாகரிகமாக பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அரசியல் களத்தில் கருத்தை எதிர்கருத்தால் எதிர்கொள்ளத் திராணியில்லாதவர்கள் தான் தனிப்பட்ட தாக்குதலையும், அநாகரிகமான வார்த்தைகளையும் கையில் எடுப்பார்கள்.
பதவியில் இருப்பவர் யாராக இருந்தாலும், ஒரு முதலமைச்சரைப் பற்றி பேசுவதற்கு குறைந்தபட்ச அரசியல் நாகரிகமும் பொது மரியாதையும் இருக்க வேண்டும். அதை மறந்து வாய்க்கு வந்தபடி பேசுவது அவரது தரத்தையே வெளிப்படுத்துகிறது.
தமிழ்நாட்டு மக்கள் அரசியல் விமர்சனத்தை ஏற்றுக்கொள்வார்கள்; ஆனால் அவதூறையும், அநாகரிகத்தையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
எனவே, நயினார் நாகேந்திரன் அவர்கள் தனது தரம் தாழ்ந்த பேச்சை உடனடியாகத் திரும்பப் பெற்று, முதலமைச்சரிடமும் தமிழ்நாட்டு மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
அரசியலில் எதிரியாக இருக்கலாம்; அதற்காக நாகரிகத்தை எதிரியாக்கிக் கொள்ளக் கூடாது!'' என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து அவதூறான மற்றும் இழிவாகப் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் வர்த்தினி காவல்துறை தலைமை இயக்குனருக்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், "இன்று காலை கமலாலயத்தில் "ஒரே நாடு 2.0" நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் பேசியது பெரும் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பொதுவெளியில் முதலமைச்சர் விஜய் அவர்களையும் அவரது தாயாரையும் மரியாதை குறைவான வகையில் கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதனை கண்டு பெண்ணாகவும் தாயாகவும் மிகுந்த வேதனை அடைவதாக வழக்கறிஞர் வர்த்தினி அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Complaint filed at DGPs office against Nainar Nagendran for speaking disparagingly about CM Vijay