சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை., மாணவி கழுத்தறுத்த கொடூரனுக்கு அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்.!
chidambaram university girl attempt murder case judgment
காதல் காரணமாக தமிழகத்தில் அண்மையில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 27 வயது மாணவி ஒருவர் எம்எஸ்சி வேளாண்மை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 30-ஆம் தேதி அவர் தங்கியிருந்த விடுதியின் அருகிலேயே இளைஞர் ஒருவரால் கத்தியால் கழுத்து அறுக்கப்பட்ட போது, அங்கிருந்த பொதுமக்கள் அந்த இளைஞரை கற்களால் அடித்து, அந்த மாணவியின் உயிரை காப்பாற்றினர்.
இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார். விசாரணை மேற்கொண்டனர். இதில், மாணவியை கழுத்து அறுத்தவன் வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி சேர்ந்த நவீன் குமார் (வயது 30) என்பது தெரியவந்தது.
பள்ளிபருவம் முதலே இருவரும் காதலித்து வந்த நிலையில், நவீன் குமார் பிடிக்கவில்லை என்று மாணவி தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நவீன்குமார் மாணவியை பார்ப்பதற்காக சிதம்பரத்தில் அவர் தங்கியிருந்த விடுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நவீன்குமார் விஷம் அருந்தி விட்டு மாணவியின் கழுத்தை அறுத்து உள்ளார் என்று போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நவீன் குமார் மீது வழக்குப்பதிவு செய்து கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. மாணவியை கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக நவீன் குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும், மற்றும் அந்த மாணவியை ஆபாசமாக பேசியதற்காக 3 மாத சிறை தண்டனையும் மேலும் 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து நவீன்குமார் கடலூர் மத்திய சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளான்.
English Summary
chidambaram university girl attempt murder case judgment