'விஜய்யைத் தனியாக நிற்க வைத்துத் தோற்கடிப்பதே திமுக-வின் திட்டம்; ஆதவ் அர்ஜுனா அந்த அஜெண்டாவைச் சரியாகச் செய்து வருகிறார்'; சார்லஸ் மார்ட்டின் விளக்கம்..!
Charles Martin clarifies that DMK loyalists such as Adhav Arjuna have infiltrated the TVK
புதுச்சேரி பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 09-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்த தேர்தலில், முதன்முறையாக லட்சிய ஜனநாயகக் கட்சி என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்று தேர்தலை சந்திக்கவுள்ளது.
இக்கட்சிக்கு 02 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் சார்லஸ் மார்ட்டின் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளார்.
இதையொட்டி நேற்று பழனி சென்ற அவர், பழனிமலை அடிவாரம் திருஆவினன்குடி கோவிலில் உள்ள முருகப்பெருமான் மற்றும் தட்சிணாமூர்த்தி சன்னதிகளில் தனது வேட்புமனுவை வைத்துச் சிறப்புப் பூஜைகளைச் செய்தார். தொடர்ந்து கோவிலில் விளக்கேற்றிச் சிறிது நேரம் தியானத்திலும் ஈடுபட்டார்.
அதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சார்லஸ் மார்ட்டின், ''23 அன்று வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் என்பதால் முருகனின் ஆசி பெற வந்துள்ளேன். புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும். திமுக அரசு மக்கள் நலனில் அக்கறை காட்டாமல் அதிகாரிகளின் பிடியில் சிக்கியுள்ளது. இதனால், தமிழகத்தை ஒரு யூனியன் பிரதேசமாக மாற்றி விடலாம் போலத் தோன்றுகிறது.'' எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக களமிறங்கும் தவெக குறித்துப் பேசிய அவர், "அரசியல் என்பது படம் எடுப்பது போன்றதல்ல; ஒரு வலுவான கூட்டணியில் இணையாமல் தனித்து நின்று வாக்கு சதவீதத்தை மட்டும் காட்டுவது வீண் செயல். விஜயின் கட்சிக்கு பின்னால் திமுக-வின் மறைமுகத் திட்டங்கள் இருக்கலாம் எனச் சந்தேகம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அதாவது, தவெகவில் திமுகவினர் ஊடுருவியுள்ளனர். குறிப்பாக ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக்கியசாமி போன்றோர் தவெக-வை யாருடனும் கூட்டணி வைக்க விடாமல் தடுக்கும் வேலைகளில் ஈடுபடுகின்றனர் என்று விமர்சித்துள்ளார். ஆதவ் அர்ஜுனா தனது அஜெண்டாவைச் சரியாகச் செய்து வருகிறார் என்றும், விஜய்யைத் தனியாக நிற்க வைத்துத் தோற்கடிப்பதே திமுக-வின் திட்டமாகத் தெரிகிறது என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
English Summary
Charles Martin clarifies that DMK loyalists such as Adhav Arjuna have infiltrated the TVK