ஆந்திராவில் பேருந்து தீ விபத்து! 20 பேர் உயிரிழப்பு...! -பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு - Seithipunal
Seithipunal


தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் இருந்து கர்நாடகாவின் பெங்களூருவை நோக்கி நேற்று இரவு புறப்பட்ட ஆம்னி பஸ், 42 பயணிகளுடன் பயணம் செய்து கொண்டிருந்தது. அதிகாலை நேரத்தில், ஆந்திராவின் கர்னூல் மாவட்டம் சின்ன டிக்கூர் அருகே சென்றபோது, எதிரே வந்த பைக்குடன் மோதிய பஸ் திடீரென தீப்பிடித்தது.

சில நொடிகளில் பஸ் முழுவதும் தீ மளமளவென பரவியதால், பெரும்பாலான பயணிகள் அதில் சிக்கினர். உயிர் பிழைக்க சிலர் ஜன்னல் வழியாக குதித்தும் தப்பினர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, 20 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்; அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் நிலவுகிறது.இந்த தகவலறிந்ததும் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சம்பவம் நடந்த பகுதி முழுவதும் துயரச் சுழலில் மூழ்கியுள்ளது.இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது எக்ஸ் பதிவில், “கர்னூல் பஸ் தீ விபத்து மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்”என்று தெரிவித்தார்.அதேபோல், பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் பதிவில், “இந்த துயரமான விபத்தால் மனம் நொந்துள்ளேன்.

உயிரிழந்தோரின் குடும்பத்தினருடன் நான் இணைந்து நிற்கிறேன்” என தெரிவித்துள்ளார்.மேலும், பிரதமர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bus fire Andhra Pradesh 20 dead Prime Minister Modi announces Rs 2 lakh relief


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->