பெண்களை வெறும் சதைப் பிண்டங்களாக பாவித்து, அவர்களை மிரட்டி....! தீர்ப்பை வரவேற்ற வானதி சீனிவாசன்!
BJP Vanathi Srinivasan say about pollachi case judgement
பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் விடுத்துள்ள அறிக்கையில், "கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி கூட்டுப் பாலியல் வன்புணர்வு வழக்கில் சம்பந்தப்பட்ட 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கிய கோவை மகளிர் நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பை மனதார வரவேற்று மகிழ்கிறேன்.
அந்தக் கொடூர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களின் கண்ணீருக்கும் கதறல்களுக்கும் சட்டம் செவி சாய்த்து நீதியை நிலைநாட்டியுள்ளது என்பதை நினைக்கையில் புது நம்பிக்கை பிறக்கிறது, மனம் நிம்மதியடைகிறது.
பெண்களை வெறும் சதைப் பிண்டங்களாக பாவித்து அவர்களை மிரட்டி தங்கள் விருப்பத்திற்கு எப்படி வேண்டுமானாலும் ஆட்டிப் படைக்கலாம் எனத் திரியும் சிலரின் ஆணாதிக்க மனப்போக்கினை இதுபோன்ற தீர்ப்புகள் தூள் தூளாக உடைத்தெறியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” என்ற பாடலைப் பள்ளி முதலே படித்துணர்ந்து வரும் இந்நாட்டில், தங்கள் இச்சைக்காக பெண்களைப் பாலியல் வேட்டையாடும் மனித மிருகங்கள் சட்டத்தின் பார்வையில் இருந்து தப்பிவிட முடியாது, அதை நீதி காத்த இந்நல்லுலகம் வேடிக்கை பார்க்காது! அப்பாவிப் பெண்களைத் தவறாகப் படமெடுத்து அவர்களை பெல்ட்டால் அடித்து தங்கள் ஆசைக்கு அடிபணிய வைத்த அந்தக் கொடூரர்களின் கைகள், இனி ஆயுள் வரை சிறைக் கம்பிகளை எண்ணி ஓய்ந்து போகட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Vanathi Srinivasan say about pollachi case judgement