பீகார்: முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார்; 20-ஆம் தேதி மீண்டும் பதவியேற்பு!
Bihar Assembly Election 2025 BJP Nitish Kumar
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களைக் கைப்பற்றி தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அசைக்க முடியாத பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. இம்முறை தொடர்ந்து இரண்டாவது முறையாக, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை (JDU) விட பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றதால், முதல்வர் பதவி குறித்த கேள்வி எழுந்தது. இருப்பினும், கூட்டணித் தலைவர்களின் ஒருமித்த முடிவின்படி, நிதிஷ் குமாரே மீண்டும் முதல்வராகப் பதவியேற்பார் என்று பா.ஜ.க. தலைவர்கள் உறுதியளித்தனர்.
தேர்தல் முடிவுகள் வெளியான இரண்டு நாட்களுக்குப் பிறகு, புதிய அரசு அமைப்பதற்கான ஆலோசனைகள் இன்று (நேற்று) தீவிரமடைந்தன. கூட்டணித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, நிதிஷ் குமார் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் புதிய ஆட்சி அமைப்பதற்காகப் பதவிகளை ராஜினாமா செய்யத் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், மந்திரிகள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் சென்று கவர்னரைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட கவர்னர், புதிய அரசு பதவியேற்கும் வரை தற்காலிக முதல்வராகத் தொடருமாறு கேட்டுக் கொண்டார்.
இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் நிதிஷ் குமார் புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். இதைத் தொடர்ந்து, அவர் நவம்பர் 20-ஆம் தேதி மீண்டும் முதல்வராகப் பதவியேற்க உள்ளார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
English Summary
Bihar Assembly Election 2025 BJP Nitish Kumar